டீசல் விவகாரம்... செல்போன் டவரில் ஏறி காரசாரமாக சண்டை போட்ட டிரைவரும், மேனேஜரும்!
அரியலூர்: அரியலூர் அரசுப் போக்குவரத்துக் கழக டிப்போவில் டீசல் ஏன் அதிகம் பயன்படுத்தினீர்கள் என்று கேட்ட மேலாளரைக் கண்டித்து செல்போன் டவர் மீது ஏறி டிரைவர் சண்டை போட்டார். அவருக்குப் போட்டியாக மேனேஜரும் அதே டவரில் ஏறி சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் பேருந்து நிலையத்தில் இருந்து கள்ளங்குறிச்சி செல்லும் சாலையில் அரசு போக்குவரத்துக்கழக டிப்போ உள்ளது. அங்கிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் பல்வேறு ஊர்களுக்கும் இயக்கப்படுகிறது. அனைத்து ஊர்களிலும் ஒரு லிட்டர் டீசலுக்கு 6 கிலோமீட்டர் தூரம் வரை பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அரசுப் போக்குவரத்துக் கழக டிரைவர்களுக்கு உத்தரவு உள்ளது.
இதன்படிதான் அரசுப் பேருந்துகளின் டிரைவர்கள் கஷ்டப்பட்டு ஓட்டி வருகின்றனர். சில சமயங்களில் குறைந்த தூரத்திற்கு பஸ்களை ஓட்டினால், சம்பந்தப்பட்ட டிரைவர்களுக்கு மெமோ அளிக்கப்படுமாம்.
டீசல் பிரச்சினை...
இந்த நிலையில் அரசு பேருந்து டிரைவர் ரவீந்திரன் என்பவர் தான் ஓட்டி வரும் பேருந்தை அரியலூரில் இருந்து சேலத்திற்கு இயக்கி, மீண்டும் டிப்போவுக்கு கொண்டு வந்தார். அப்போது டீசல் அளவு பரிசோதிக்கப்பட்டது. இதில் ஒரு லிட்டருக்கு 5.86 ஓடியது தெரிய வந்தது. தகவல் அறிந்த கிளை மேலாளர் சுந்தரம், ரவீந்திரனை கண்டித்துள்ளார்.
செல்போன் டவர்...
இதனால் அவமானம் அடைந்த ரவீந்திரன், அருகே உள்ள செல்போன் டவரில் ஏறி, ‘நான் என்ன டீசலை வீட்டுக்கு எடுத்துக்கிட்டு போறேனா. பராமரிப்பு இல்லாத பேருந்துகளை இயக்கச் சொன்னால் இப்படித்தான் இருக்கும்' என்றார்.
மேலதிகாரிகள் டார்ச்சர்...
உடனே கிளை மேலாளர் சுந்தரமும் அதே டவர் மீது ஏறி, ‘நான் என்ன செய்வேன். எனக்கு மேலே உள்ள அதிகாரிகள் என்னை டார்ச்சர் செய்கிறார்கள். டீசல் செலவு அதிகமாக காரணம் என்னவென்று கேள்வி மேல் கேட்கிறார்கள். நான் மட்டும் டீசலை வீட்டுக்கு எடுத்துக்கிட்டு போறேனா. நீங்க மட்டும்தான் தற்கொலை செய்வேன்னு மிரட்டுவீங்களா.. நானும் தற்கொலை செஞ்சுக்கிறேன்' என்று கூறவே அந்த இடத்தில் செம கூட்டம் கூடி விட்டது.
வழக்குப் பதிவு...
முதல்ல ரெண்டு பேரும் கீழ வாங்கப்பா பேசி தீர்த்துக்கலாம் என்று கூறி சமாதானம் செய்து இருவரையும் கீழே இறக்கினர். போலீஸாருக்கும் தகவல் வந்து அவர்களும் விரைந்து சென்று இருவரையும் பொறுமையாக பிரச்சினையை அணுகுமாறு அறிவுரை கூறி விட்டுச் சென்றனர். அதேசமயம், ஒரு வழக்கையும் முன்ஜாக்கிரதையாக பதிவு செய்துள்ளனராம்.