விரைவில் விடுதலை... அதிகாரிகள் உறுதி... திருச்சி சிறையில் அகதிகள் உண்ணாவிரதம் வாபஸ்
திருச்சி: திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 12 அகதிகளும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் உறுதிமொழி அளித்ததைத் தொடர்ந்து, 5வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த அகதிகள், தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள அகதிகளில் எட்டு பேர், கடந்த புதனன்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். தமது குடும்பங்களுடன் இணைந்து வாழ அனுமதிக்குமாறு கோரி இவர்கள் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
தமிழகத்திற்கு அகதிகளாக வந்த ஈழத் தமிழர்களான இவர்கள் ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட வழக்கிலும்,தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான வழக்கிலும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
எனினும், சிறை வாசலில் வைத்து மீண்டும் கைதுசெய்யப்பட்ட அவர்கள், சிறப்பு முகாம் எனும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனால், குடும்பத்தில் இருந்து தனிமைப்படுத்தி கடந்த சில வருடங்களாக சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக தங்களை நம்பியிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்து ஓராண்டாகியும் தங்கள் மீது வழக்குப் பதியாமல் சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.
அதோடு, பொய் குற்றச்சாட்டின் பேரில் தங்களை கைது செய்து உள்ளதாக போலீசார் மீது அவர்கள் குற்றம் சாட்டினர். ஆகையால் தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கையும் விடுத்தனர். இன்று ஐந்தாவது நாளாக அவர்களது உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தது.
இந்நிலையில், சிறப்பு முகாமில் உள்ள 12 அகதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து அகதிகள் தங்கள் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றனர்.