மின் ஊழியர்கள் அலட்சியம்.. சென்னை கொடுங்கையூரில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த அக்கா-தங்கை பலி
சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கியதில் 2 சிறுமிகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
Recommended Video
சென்னை: கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கியதில் 2 சிறுமிகள் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொடுங்கையூர் ஆர் ஆர் நகரைச் சேர்ந்த 5 சிறுமிகள் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பாவனா என்ற 10 வயது சிறுமியும் யுவஸ்ரீ என்ற 8 வயது சிறுமியும் மின் இணைப்பு பெட்டியில் இருந்து அறுந்து தொங்கிய மின்கம்பியை தவறுதலாக மிதித்தனர்.
இதில் 2 சிறுமிகளும் படுகாயமடைந்தனர். இதையடுத்து 2 சிறுமிகளும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மின்சாரம் தாக்கி பலி
ஆனால் சிகிச்சைப் பலனின்றி 2 சிறுமிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரும் சகோதரிகள் ஆவர்.
மின்வாரியம் மீது புகார்
இரண்டு குழந்தைகளும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரையும் அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மின்கம்பி அறுந்து கிடப்பது குறித்து புகார் அளித்தும் மின் வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
அமைச்சர் உத்தரவு
புகார் அளித்தும் கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சிறுமிகள் உயிரிழந்தது குறித்து விசாரிக்க மின்துறை அமைச்சர் தங்கமணி உத்தரவிட்டார்.
8 பேர் சஸ்பெண்ட்
மேலும் தவறு செய்த மின்வாரிய ஊழியர்கள் மீது விசாரணைக்குப் பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி உறுதி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மின்வாரியத்தைச் சேர்ந்த 3 அதிகாரிகள் மற்றும் 5 ஊழியர்கள் ஆகிய 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மின்பெட்டிகளை ஆய்வு செய்ய குழு
மேலும் உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். சென்னையில் உள்ள மின்பெட்டிகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
அமைச்சர் அஞ்சலி
மேலும் உயிரிழந்த 2 சிறுமிகளி்ன் உடலுக்கு அமைச்சர் தங்கமணி அஞ்சலி செலுத்தியுள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள சிறுமிகளின் உடலுக்கு நேரில் சென்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அஞ்சலி செலுத்தினார்.