கருணாநிதியை பார்க்க வந்த வைகோவை திமுகவினர் அனுமதித்திருக்கலாம் - திருநாவுக்கரசர்
கருணாநிதியை சந்திக்க திமுகவினர் வைகோவை அனுமதித்திருக்கலாம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னை: சென்னை காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூச்சுத்திணறல், நுரையீரல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதால் ட்டிரக்கியோஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கருணாநிதியை சந்திக்க யாரும் வரவேண்டாம் என்று கூறினாலும், தினசரியும் பல அரசியல் தலைவர்கள் வந்து செல்கின்றனர். கருணாநிதியை சந்திக்க, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நேற்று இரவு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது ஏராளமான திமுக தொண்டர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வைகோ கார் மீது கற்கள் மற்றும் செருப்புகள் வீசப்பட்டன. இதையடுத்து கருணாநிதியை பார்க்காமல் வைகோ திரும்பிச் சென்றார்.
இதற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். தொண்டர்களின் நடவடிக்கைக்காக திமுக வருத்தம் தெரிவிப்பதாக செய்தித் தொடர்பாளர் டி.கே.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறினார். இருப்பினும் வைகோவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து ஸ்டாலின் உருவ பொம்மையை மதிமுகவினர் எரித்தனர்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், கருணாநிதியை பார்க்க வந்த வைகோவை திமுகவினர் தடுத்து நிறுத்திய சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டார்.
இந்த சம்பவத்துக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தது வரவேற்கத்தக்கது என்றும், கருணாநிதியை சந்திக்க திமுகவினர் வைகோவை அனுமதித்திருக்கலாம் என்றும் கூறினார். இரு கட்சியினரும் பிரச்னையை இத்துடன் விட்டுவிட வேண்டும் என்பதே காங்கிரசின் விருப்பம் என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.