"விஐபிக்கள்" தொல்லை தாங்க முடியலையே.. குற்றாலத்திற்குக் குளிக்க வரும் மக்கள் குமுறல்!
குற்றாலம்: குற்றால அருவிகளில் குளிக்க திடீர் விசிட் அடிக்கும் வி.ஐ.பி.க்களால் பொதுமக்கள் குளிக்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.
குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் நீர் கொட்டும். தென்மேற்கு பருவமழையின் கருணையால் தண்ணீர் கொட்டுவது வழக்கம். இந்த 3மாதங்களில் சுமார் 30 லட்சம் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் நீராட நாடெங்கிலும் இருந்து வருவது வழக்கம்.
தண்ணீர் அதிகமாக கொட்டும் நேரங்களில் பொதுமக்கள் ஆனந்தத்தோடு குளித்து மகிழ்ந்து செல்வார்கள். ஆனால் தற்போது மழை இல்லாததால் குறைவாக தண்ணீர் கொட்டுவதால் இன்று விடுமுறை தினம் அதுமட்டுமின்றி நாளை மறுநாள் ரம்ஜான் பண்டிகை விடுமுறை என்பதால் அருவிக்கரையில் கூட்டம் அலைமோதி வருகிறது.
பாதுகாப்பு பணியில் ஒரு போலீஸ் மட்டுமே பாதுகாப்பு வளையத்தில் நின்று சுற்றுலாப் பயணிகளை கட்டுப்படுத்தி வரும் நிலையில் திடீர் என அதிக போலீசார் பாதுகாப்பு வளையத்தோடு சிலர் மெயின் அருவி நோக்கி வருவதும் உடனடியாக குளித்துக் கொண்டிருந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்போடு வந்த வி.ஐ.பி.க்கள் குளிக்கத்தொடங்கி சுமார் 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் தவியாய் தவிக்கும் சம்பவங்கள் இங்கு அடிக்கடி நடந்து வருகிறது.
சீசன் காலங்களில் அதுவும் விடுமுறை நாட்களில் பாகுபாடின்றி அனைவரும் குளிக்கும் அருவியில் இப்படி அடிக்கடி வி.ஐ.பி.க்கள் வந்து குளிக்க வருவதால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த வேதனைக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று மதியம் இதுபோன்று யாரோ சில முக்கிய வி.ஐ.பி.க்களால் மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் தவித்த சம்பவமும் நடந்ததாக கூறப்படுகிறது.