காவல்துறையினர் தீ வைத்தது உறுதியானால் கடும் நடவடிக்கை: சட்டசபையில் ஓபிஎஸ் உறுதி
சென்னை வன்முறையில் காவல்துறையினர் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வர் கூறியுள்ளார்.
சென்னை: சென்னையில் கடந்த 23ஆம் தேதியன்று நிகழ்ந்த வன்முறை சம்பவத்தின் போது காவல்துறையினரே ஆட்டோ, குடிசைக்கு தீ வைத்த வீடியோக்கள் ஊடகங்களில் வெளியானது. வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் வெளியானது.
தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். அதில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான இளைஞர்களின் அமைதிப் போராட்டம் வன்முறையில் முடிந்தது ஏன்? வன்முறை ஏற்படக் காரணம் என்ன? இதற்கு பேரவையில் முதல்வர் பதில் அளிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தது. மேலும், ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் கொண்டு வந்த முதல்வருக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மிக நீண்ட விளக்கம் ஒன்றினை அளித்தார். அதன் விபரம்:
ஜல்லிக்கட்டு போராட்டம்
கடந்த 2006ம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு விவகாரம் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. திமுக இணைந்திருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூட்டணி ஆட்சியின் போதுதான் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது இறுதி நாட்களில் ஜல்லிக்கட்டு தொடர்பாக தீர்ப்பளிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து அலங்காநல்லூரில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
தொடர் போராட்டம்
இந்த போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் சென்னை மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் போராட்டம் நடத்தப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்துக்கு காவல்துறையினர் எந்த குந்தகமும் விளைவிக்காமல் மாணவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வந்தனர். ஆனால், போராட்டக் குழுவில் சமூக விரோதிகள் மற்றும் சில அமைப்பினர் ஊடுருவியதாக தகவல்கள் கிடைத்தன.
வன்முறை
போராட்டம் திசை மாறியதால்தான் வன்முறை ஏற்பட்டது. போராட்டக்காரர்களைத் தடுக்க காவல்துறை வைத்திருந்த தடுப்புகளை அவர்கள் தாண்டியதால்தான் கண்ணீர் புகைக் குண்டு வீசப்பட்டது. போராட்டக்காரர்கள் காவல்நிலையத்தில் இருந்த வாகனங்களுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டனர். காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்கினர். சென்னையில் இது போல பல இடங்களில் வன்முறைகள் நடந்தன என்று முதல்வர் பன்னீர்செல்வம் சட்டசபையில் கூறினார்
காவல்துறையினர் பாதிப்பு
ஐஸ்அவுஸ் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டை வீசி சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தினர் என்றும், கலவரத்தில் பொதுமக்களும், காவலர்களும் பாதிக்கப்பட்டதாகவும் ஓ.பன்னீர் செல்வம் விள்ளம் அளித்தார். மக்கள் பாதிக்கப்படுவதை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாக தெரிவித்த ஓ.பி.எஸ். போலீசார் மற்றும் போலீஸ் வாகனங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
பொது சொத்துக்கு சேதம்
வன்முறையாளர்கள் தீவைத்ததில் 11 காவல்துறை வாகனங்கள், ஒரு மாநகர அரசு பேருந்து, பொதுமக்களின் கார், 29 இருசக்கர வாகனங்கள், தீவைக்கப்பட்டன. 66 வழக்குகள் பதியப்பட்டு 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரையில் வைகை ஆற்றில் ரயில் மறிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. சேலத்திலும் ரயில் சிறைபிடிக்கப்பட்டது சேதப்படுத்தப்பட்டது.
போலீஸ் நடவடிக்கை
ஹிப் ஹாப் தமிழா ஆதி, சிவசேனாபதி, ராஜசேகர், அம்பலத்தான் ஆகியோர் 10 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள்.அமைதியான போராட்டத்தை திசை திருப்பியது சமூக விரோத கும்பல். காவல்துறை நடவடிக்கையினால் பொதுமக்களும் அவர்களின் சொத்துக்களும் சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.
காவலர்கள் மீது விசாரணை
பொதுமக்களின் சொத்துக்களுக்கு காவலர்கள் சிலர் தீ வைத்து வன்முறையை தூண்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வன்முறையின் போது காவல்துறையினர் அத்துமீறியதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டினர். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. இது பற்றிய வீடியோக்களும் வாட்ஸ்அப்பில் பகிரப்படுகின்றனர். இது பற்றி விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வன்முறையில் ஈடுபட்டது காவலர்கள்தான் என்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டசபையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உறுதியளித்துள்ளார்.