ஆளுநரும், சசிகலாவும் அரை மணி நேரம் பேசுனாங்க.. அப்படி என்ன பேசிக்கிட்டாங்க??
தமிழக ஆளுநரும், சசிகலாவும் அரை மணி நேரம் சந்தித்தபோது பேசிக் கொண்டது குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவை நேற்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், சசிகலாவும் அடுத்தடுத்து சந்தித்தனர். அப்போது சசிகலாவிடம் அரை மணி நேரம் பேசினார் ஆளுநர். அவர்கள் என்ன பேசிக் கொண்டர்கள் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
ஓ.பன்னீர் செல்வத்திடம் கிட்டத்தட்ட 20 நிமிடம் பேசினார் ஆளுநர். சசிகலாவிடம் அரை மணி நேர சந்திப்பாக அது அமைந்தது. அப்போது சசிகலா ஒரே ஒரு வார்த்தையை மட்டுமே ஆளுநரிடம் பேசியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அவருடன் போயிருந்த அமைச்சர்கள் மற்ற விஷயங்களை ஆளுநரிடம் எடுத்துரைத்துள்ளனர்.
I Stake claim என்பது மட்டுமே ஆளுநரிடம் சசிகலா பேசிய வார்த்தை என்று சொல்லப்படுகிறது. அதன் பின்னர் அவர் கொண்டு சென்றிருந்த எம்.எல்.ஏக்கள் ஆதரவுப் பட்டியல், அவரை அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்களது கட்சியின் சட்டசபை தலைவராக தேர்ந்தெடுத்த கடிதம் உள்ளிட்டவற்றை ஆளுநரிடம் கொடுத்து அமைச்சர்கள் விளக்கினராம்.
ஆங்கிலத்தில் பேசிய சசிகலா
ஆளுநரை சந்தித்தபோது வணக்கம் வைத்த பின்னர் சசிகலா நேரடியாகவே விஷயத்துக்குப் போய் விட்டாராம். ஆங்கிலத்தில் "I stake claim" என்று அவர் கூறியுள்ளார். அதன் பின்னர் அவருடன் வந்திருந்த அமைச்சர்கள் ஆளுநரிடம் பேசியுள்ளனர். சசிகலா ஏன் முதல்வராக வேண்டும் என்பது தொடங்கி அவருக்கான ஆதரவு பட்டியல் வரை விலாவாரியாக அவர்கள்தான் ஆளுநரிடம் பேசினார்களாம்.
திருப்தி இல்லையாம்
ஆனால் சசிகலா தரப்பின் சந்திப்பின் முடிவின்போது ஆளுநர் முகத்தில் முழுமையாக திருப்தி இல்லையாம். குறிப்பாக எம்.எல்.ஏக்களின் பட்டியல் குறித்து அவருக்கு திருப்தி வரவில்லையாம். ஒவ்வொரு கையெழுத்தையும் நான் சோதித்துப் பார்க்க வேண்டும் என்று அவர் சசிகலா தரப்பிடம் கூறியதாக தகவல்கள் கூறுகின்றன. காரணம் பல கையெழுத்துக்களில் அவருக்கு திருப்தி இல்லை என்று கூறப்படுகிறது.
ஓ.பி.எஸ் எச்சரிக்கையால்
காரணம், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்பே இதுகுறித்து ஆளுநரை எச்சரித்திருந்ததுதான். ஆளுநரை சந்தித்தபோது, அதிமுக எம்.எல்.ஏக்களிடம் சசிகலா தரப்பு முன்கூட்டியே வெள்ளைத் தாள்களில் கையெழுத்து வாங்கி விட்டது. அவர்களை தற்போது அடைத்து வைத்துள்ளனர். எனவே ஆட்களை நேரில் பார்க்காமல் எதையும் முடிவு செய்யாதீர்கள் என்று ஓ.பி.எஸ் கூறி விட்டாராம். இதனால்தான் ஆளுநர் யோசனையில் உள்ளாராம்.
சசிகலாவிடமும் விசாரணை
மேலும் சசிகலாவிடமே இதுகுறித்து விளக்கமும் கேட்டுள்ளார் ஆளுநர். இந்தக் கையெழுத்து எப்போது பெறப்பட்டது. அதிமுக எம்.எல்.ஏக்கள் எங்கே உள்ளனர் என்பது குறித்து அவர் விசாரித்துள்ளார். இதில் போலி கையெழுத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறதே என்றும் கூட அவர் விசாரித்துள்ளார். ஆனால் அதை மறுத்த சசிகலா தரப்பு, இதுகுறித்து மூத்த அதிமுக தலைவர் ஒருவர் மூலம் உண்மை என நிரூபிக்க தயாராக இருப்பதாக ஆளுநரிடம் கூறியுள்ளது.
பெரும்பான்மையை நிரூபிக்க விரும்பாத சசிகலா
மேலும் இந்த சந்திப்பின்போது சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டியது வரும் என்று ஆளுநர் கூறியபோது அதை சசிகலா விரும்பவில்லையாம். சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கு அவர் தயக்கம் காட்டினாராம். ஆனால் சட்டப்படியான நடைமுறைகளைத் தவிர்க்க முடியாது என்று ஆளுநர் கூறி விட்டாராம்.
தனியாக 10 நிமிடம் சந்திப்பு
குழுவாக எம்.எல்.ஏக்களைச் சந்தித்து முடித்த பின்னர் தனியாக 10 நிமிடம் ஆளுநருடன் பேசினாராம் சசிகலா. அப்போது ஓ.பன்னீர் செல்வம் எழுப்பியிருந்த சில கேள்விகளுக்கு அவர் விளக்கம் கொடுத்ததாக கூறப்படுகிறது.