ஜெயலலிதா வெற்றிக்கு 'அணிலாக' உதவிய விஜய்.. அதிமுக ஆட்சியையே இப்போது விமர்சனம் செய்வது ஏன்?
Recommended Video
சென்னை: அதிமுகவின் வெற்றிக்கு அணிலாக இருந்து, நடிகர் விஜய் உதவி செய்த விஷயம் உங்களில் பலருக்கும் நினைவிருக்கலாம். ஆனால் மறைமுகமாக இன்று அதே அதிமுக ஆட்சியை விஜய் விமர்சனம் செய்து பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
'நாளைய தீர்ப்பு' என்ற தனது முதல் திரைப்படத்தில் நடிக்கும் போது, தமிழகத்தின் தீர்ப்பை எழுத வாருங்கள் என்று ரசிகர்கள் தன்னை அழைப்பார்கள் என்று விஜய் எதிர்பார்த்திருக்க மாட்டார்.
ஆனால் காதல் நாயகனாக நடித்து ஹிட் படங்களை கொடுத்து வந்த விஜய், திருமலை திரைப்படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இதன் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தை அவர் ஈட்டினார். காதல் திரைப்படங்களால், கிடைத்த பெண்கள் ஆதரவும், ஆக்ஷன் திரைப்படங்களால் கிடைத்த இளைஞர்கள் ஆதரவுமாக அவரது ரசிகர் வட்டாரம் பெரிதாக விரிவடைந்தது.
அஜித்-விஜய் மோதல்
அப்போதுதான் அஜித் மற்றும் விஜய் நடுவேயான திரை மோதல்கள் அதிகமாகின. இருவருமே தங்களது பட பாடல்களில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு பாடுவதும் ஒருவரை ஒருவர் மறைமுகமாக குறிப்பிடும் வசனங்களும் இருவரது திரைப்படங்களிலும் இடம்பெற்றன. ஹிட்லராக வாழ்வது கொடிது, புத்தனாக வாழ்வது கடிது, ஹிட்லர், புத்தன் இரண்டுமாக நான் இருந்தால் உனக்கென்ன.. என்று அஜித் ஒரு பாடலில் பாடினால், அதற்கு பதிலடியாக, ஹிட்லர் வாழ்க்கையும் வேண்டாம், புத்தன் வாழ்க்கையும் வேண்டாம் என்று மற்றொரு பாடலில் விஜய் பதில் கொடுப்பார். இதனால் இவ்விரு நடிகர்களின் ரசிகர்களும் ஏதோ தங்களுக்கு அவமானம் நேர்ந்து விட்டது என்பதை போல துடித்துக் கொண்டு, தங்களது அபிமான ஹீரோக்கள் படத்தை வெற்றி பெற வைக்க தீவிர முயற்சி எடுப்பார்கள்.
அரசியல் கட்சி
இதன் காரணமாக, அஜித் போலவே, விஜயும் ஒரு மாஸ் ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றார். ரசிகர்களின் ஆரவாரத்தால் முதல் நாள் முதல் காட்சியிலேயே தியேட்டர் குலுங்கும். விஜய் ரசிகர் மன்றம், விஜய் மக்கள் இயக்கமாக மாறுவதற்கு இது போன்ற ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு தான் காரணமாக இருந்தது. விஜய் மக்கள் மன்றம் ஏன் அரசியல் கட்சியாக மாற கூடாது என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.
ஜெயலலிதா ஆதரவு
இந்த நிலையில்தான் 2011 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போது அதிமுகவிற்கு விஜய் ஆதரவு அளித்தார். அப்போது சுமார் 35 தொகுதிகளை தங்கள் மன்றத்திற்கு ஒதுக்குமாறு ஜெயலலிதாவிடம், விஜய் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் கேட்டுக்கொண்டதாக கூட ஒரு தகவல் உண்டு. ஆனால் அது போல எதுவும் ஒதுக்கப்படவில்லை.
அணிலாக உதவி செய்த விஜய்
கருணாநிதி ஆட்சி முடிவு பெற்று 2011இல் ஜெயலலிதா ஆட்சி வந்த போது இந்த வெற்றியில் தானும் ஒரு அணிலாக இருந்து உதவி செய்ததாக விஜய் கூறினார். இதனால் அதிமுக தலைமையுடன், விஜய்க்கு நெருக்கம் அதிகரித்தது. எனவே அரசியல் ஆசையும் அதிகரித்தது. ஜெயலலிதாவிடம் இருந்த நெருக்கம் அடிப்படையில் துணிச்சலாக ஒரு படத்தின் தலைப்பை வைக்க முன் வந்தார் விஜய்.
தலைமையேற்க நேரம் வந்துவிட்டது
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தலைவா என்ற பெயருடன் விஜய் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு படம் ரிலீசாக இருந்தது. தலைவா என்ற தலைப்புக்கு கீழே time to lead என்ற உப தலைப்பு கொடுக்கப்பட்டது. இங்குதான் ஆரம்பித்தது பிரச்சனை. திரைப்படத்தை வெளியிட விடாமல் ஆளுங்கட்சி தரப்பில் இருந்து நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. தேர்தலில் ஆதரவு தெரிவித்த ஒரே காரணத்திற்காக இவரே தலைவராக உருவாக நினைப்பதா என்று ஆளும் வட்டாரம் கடும் கோபமடைந்தது.
கோடநாடு அவமானம்
திரைப்படத்தை வெளியிட முடியாமல் கையை பிசைந்தார் விஜய். இதையடுத்து அப்போது கோநாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஜெயலலிதாவை சந்திப்பதற்காக நேரடியாக விஜய் சென்றார். ஆனால் கோடநாடு எஸ்டேட் வளாகத்திற்குள் கூட விஜய்யை அனுமதிக்காமல் திருப்பியனுப்பப்பட்டார். இந்த சம்பவத்தை கேள்வியுற்ற ரசிகர்கள் அதை தங்களுக்கு நேர்ந்த அவமானமாகக் கருதினர். ரசிகர்களை அமைதிகாக்க விஜய் கேட்டுக்கொண்டார். பல தரப்பு சமரச முயற்சிக்கு பிறகு, time to lead என்ற உபவாசத்தை நீக்கிவிட்டு அந்த திரைப்படம் வெளியானது.
திமுக மீது பாய்ச்சல்
இதன் பிறகு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியானது கத்தி திரைப்படம். இந்த திரைப்படத்தில் 2ஜி விவகாரம் குறித்து காரசாரமான வசனங்கள் இடம் பெற்றிருந்தன. வெறும் காற்றில் ஊழல் செய்யும் நாடு இது என்று விஜய் வசனம் பேசினார். அப்போது 2ஜி வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருந்தது. அது ஊழல் என்று தீர்மானித்து ஒரு வசனத்தை விஜய் பேசியது சர்ச்சைக்குள்ளானது. இருப்பினும் திமுக தரப்பில் கடுமையான எதிர்வினைகள் எதுவும் தரப்படவில்லை. அதை அப்படியே விட்டு விட்டனர்.
திமுக பக்கம்
இதன் பிறகு 2ஜி வழக்கில் ஊழல் நடைபெறவில்லை என்று நீதிமன்றமே சமீபத்தில் தீர்ப்பளித்தது நினைவிருக்கலாம். திமுகவை எதிர்த்து 2ஜி குறித்து விஜய் பேசினாலும் கூட அதிமுக தரப்பில் அதன்பிறகு அவருக்கு ஆதரவு கரம் நீட்ட படவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இந்த நிலையில்தான் இப்பொழுது திமுகவின் முக்கிய புள்ளியான கலாநிதிமாறனின் சன் நெட்வொர்க் நிறுவனத்திற்காக சர்கார் திரைப்படத்தில் நடித்துள்ளார் விஜய். சர்கார் இசை வெளியீட்டு விழாவில்தான் அதிமுக ஆட்சியை மறைமுகமாக விமர்சனம் செய்து பேசியுள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.