லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை ஏன் குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கூடாது? - ஹைகோர்ட்
அரசு ஊழியர்களின் ஊழலை தடுக்க ஏன் புதிய சட்டம் கொண்டுவரக் கூடாது? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
Recommended Video
சென்னை: லஞ்சம் வாங்கும் பொது ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க குண்டர் தடுப்புச்சட்டத்தை போல, தனியாக தடுப்புச் சட்டம் கொண்டுவந்தால் என்ன? என்று ஹைகோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதிய சட்டம் கொண்டுவரும் வரை, சமூகவிரோதிகள் மீது தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் குண்டர் தடுப்புச் சட்டத்தை பொது ஊழியர்கள் மீது ஏன் பயன்படுத்தக்கூடாது? என்றும் நீதிபதி கேட்டுள்ளார்.
சென்னை ஆலந்தூரை சேர்ந்தவர் பூபதி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், 'எங்களது தாத்தாவின் சொத்துகளை பாகப்பிரிவினை செய்து, பத்திரப்பதிவு செய்தோம். முறையான முத்திரைக் கட்டணம் செலுத்தியும் பம்மல் சார் பதிவாளர் பத்திரப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறார் என்று கூறியிருந்தார்.
பத்திரப்பதிவுக்கு இழுத்தடிப்பு
இந்த வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்தார். அப்போது மனுதாரரின் வக்கீல் என்.சுரேஷ், லஞ்சம் கொடுக்கவில்லை என்பதால் முறையான முத்திரைக் கட்டணம் செலுத்தியும், பத்திரப்பதிவை செய்யாமல் சார் பதிவாளர் இழுத்தடித்தார். இதுபோல தான் ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் நடைபெறுகிறது என்று கூறினார்.
ஹைகோர்ட்டில் விசாரணை
நீதிபதி என்.கிருபாகரன், சில கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பாகப்பிரிவினை சொத்துகள் தொடர்பான பத்திரப்பதிவுகளை செய்து, அந்த பத்திரங்கள் நீதிபதி முன்னிலையில் மனுதாரரின் வக்கீலிடம் ஒப்படைக்கப்பட்டது.
லஞ்ச வழக்குகளில் விடுதலை
கடந்த 10 ஆண்டுகளில் பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது? என்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால், அந்த கேள்விக்கு போலீசார் சரியான பதில் தரவில்லை. போலீஸ் தரப்பில் தரப்பட்ட பதிலை ஆய்வு செய்தபோது, 10 ஆண்டுகளில் லஞ்சம் பெற்றதாக 77 பத்திரப்பதிவு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்குகளில் இருந்து பல அதிகாரிகள் விடுதலை ஆகியுள்ளனர்.
தனிச்சட்டம் தேவை
லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை ஏன் குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கூடாது என்றும், ஊழியர்களை தண்டிக்கும் வகையில் ஏன் தனி தடுப்புச் சட்டம் கொண்டுவரக் கூடாது. மேலும், ஊழலைத் தடுக்க லஞ்ச ஒழிப்பு துறையிடம் என்ன மாதிரியான தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. கடந்த பத்தாண்டுகளில் லஞ்ச வழக்கில் எத்தனை பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? அவர்களிடம் இருந்து எவ்வளவு லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது? அதிகளவில் லஞ்சம் புழங்கும் முதல் 5 அரசு துறைகள் எவை?
லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை நடத்தும்போது ஏற்படும் பிரச்சினைகள் என்ன? லஞ்ச ஒழிப்பு துறைக்கு போதிய நிதி ஒதுக்கப்படுகிறதா? என்பது உள்ளிட்ட 15 கேள்விகளை எழுப்பி, அரசு பதிலளிக்குமாறு இந்த வழக்கை 11ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.