இன்று காலை வெறும் 97 மெ.வாட் காற்றாலை மின்சாரமே உற்பத்தி.. வெளுத்து வாங்கப் போகும் மின்வெட்டு
நெல்லை: தமிழகத்தில் இன்று காலை நிலவரப்படி வெறும் 97 மெகாவாட் மின்சாரமே காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் மின்வெட்டு மீண்டும் தலை விரித்தாடும் அபாயம் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி சரிய தொடங்கி விட்டதால் பல இடங்களில் திடீர் மின்வெட்டு தலை தூக்கியுள்ளது. இதனால் நிம்மதியாக இருந்த பொதுமக்கள் மீண்டும் புலம்ப தொடங்கியுள்ளனர்.
காற்றாலை மின்சாரம்தான் தமிழக மக்களை வியர்க்காமல் பார்த்து வந்தது. தற்போது அதிலும் மண் விழுந்துள்ளது.
தினசரி தேவை 13,775 மெகாவாட்
தமிழகத்தில் நாள்தோறும் சராசரியாக 13775 மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் உற்பத்தியோ 2 ஆயிரம் மெகா வாட் பற்றாக்குறையாக கிடைத்து வருவதால் அவ்வப்போது மின் தடை செய்யப்பட்டு வந்தது.
மின்தடையை நீக்கிய ஜெயலலிதா
இந்த நிலையில் ஜூன் மாத தொடக்கத்தில் தமிழகத்தில் முற்றிலும் மின்தடை நீக்கப்படுவதாக முதல்வர் அறிவித்தார். அதற்கு கேற்ப ஜூன், ஜூலை மாதங்களில் தென் மேற்கு பருவ காற்று பலமாக வீசியதால் காற்றாலை மூலம் நாள்தோறும் சராசரியாக 4500 மெகா வாட் வரை மின்சாரம் கிடைத்தது.
அறவே இல்லாத நிலை
மேலும் தமிழக அரசு புதிதாகவும், பழைய மின் நிலையங்களை பராமரித்தும் மின் உற்பத்தியை தொடங்கியதால் கடந்த இரண்டு மாதங்களாக மின் வெட்டு அறவே இல்லை. இந்த நிலையில் தென் மேற்கு பருவ காற்று அடியோடு நின்று விட்டது. மழையும் குறைந்து விட்டது. நேற்று முன்தினம் இரவு 955 மெகா வாட் என்ற நிலையில் காற்றாலை மின் உற்பத்தி இருந்தது.
இன்று வெறும் 97 மெகாவாட்தான்
இந்நிலையில் இன்று அதிகாலை நிலவரப்படி வெறும் 97 மெகா வாட் என்ற அளவில் உற்பத்தியானது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக தென் மாவட்டங்களான செங்கோட்டை, தென்காசி உள்பட பல பகுதிகளில் காலை 7 மணி முதல் 8 மணி வரை 1 மணி நேரம் மின்தடை செய்யப்பட்டது. இன்றும் அது தொடர்கிறது.
மின் வாரியத்தினர் நிலைமையை சமாளிக்க மாற்று வழியை தேடி வருகின்றனர்.