சல்லி சல்லியா நொறுங்கிடுச்சே.. கணிப்புகளை கலைத்த நயினார்! அதிமுக - பாஜக கூட்டணி தொடருதாம்
திருநெல்வேலி: அதிமுக மற்றும் பாஜக இடையிலான கூட்டணியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என நெல்லையில் நடந்த விழாவில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து இருக்கிறார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக எதிர்ப்பு நிலைபாட்டில் இருப்பதாக கூறப்படும் நிலையில் நயினார் நாகேந்திரன் இவ்வாறு பேசி உள்ளார்.
தேவேந்திர குல வேளாளர் பண்பாட்டு நடுவம் சார்பில் நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விவசாயத்திற்கு மழை பொழிய செய்து பேரு உதவியாக இருந்த இந்திரனை வழிபடும் இந்திர விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றிய பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், "தேவேந்திரகுல மக்களின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் இந்திர விழா நடத்தப்பட்டு வந்தது.
சேது சமுத்திர திட்டம்.. பாஜகவிற்குள் குழப்பம்? ஆதரித்த நயினார்.. விமர்சிக்கும் அண்ணாமலை
தேவேந்திரகுல சங்கங்கள் வேண்டும்
ஒரு சிலரின் சூழ்ச்சியின் காரணமாக அதை நடத்த முடியாமல் போனது. தற்போது இந்த விழா நடத்தப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இதுபோன்று பாரம்பரியமான முறையில் அந்த நிகழ்வை நடத்த வேண்டும். ஒவ்வொரு கிராமங்களின் வாரியாக தேவேந்திரகுல சங்கங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
நிலையை மாற்றிய மோடி
தேவேந்திரகுல வேளாளர்களின் குழந்தைகள் படிப்பதற்கு தேவையான உதவிகளை செய்யவும் திருமணத்திற்கு தேவையான உதவிகளை செய்யவும் இந்த சங்கம் தேவை. தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் ஒடுக்கப்பட்ட சமுதாயமாக ஒரு சிலரின் சூழ்ச்சியால் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த காட்சியை மாற்றி காட்டியவர் நரேந்திர மோடி என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
அதிமுக கூட்டணி தொடர்கிறது
இந்த தேர்தலில் தேவேந்திர குல மக்கள் எனக்கு 25,000 வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்தார்கள். வருகின்ற காலத்தில் இந்த மக்கள் 50 ஆயிரம் வாக்குகள் அளித்து என்னை வெற்றிபெறச் செய்வார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் பாரதிய ஜனதா கட்சியும் என்றும் கூட்டணியில் இருக்கும்.
பாஜகவில் இணைந்தாலும் அண்ணா வழி
எந்த விதமான கருத்து மனமாச்சியமும் எங்கள் கூட்டணியில் கிடையாது. நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை என்பதை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுகிறேன். நான் பாஜக வந்து ஆறு வருடம் ஆகிவிட்டது என சொல்கிறார்கள் கடந்து வந்த பாதையை மறந்து விடக்கூடாது என்று தான் பேரறிஞர் காட்டும் பாதை என சொல்கிறேன்." என தெரிவித்தார்.
ஓபிஎஸ் - இபிஎஸ் மோதல்
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிட்டது. தமிழ்நாட்டில் இந்த 2 தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை தழுவிய நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே உட்கட்சிப் பூசல் தொடர்ந்து வருகிறது.
அதிமுக - பாஜக கூட்டணி
ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து பாஜக ஆதரவு நிலைபாட்டை எடுத்து வரும் நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக எதிர்ப்பு நிலைபாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்வது சிக்கல் என்று பேசப்பட்டு வரும் நிலையில் நயினார் நாகேந்திரன் இந்த விளக்கத்தை கொடுத்து உள்ளார்.