தமிழ்நாட்டை வன்முறை களமாக்கும் சதிக்கு பின்னணியில் அவங்களா? - சந்தேகம் கிளப்பும் பீட்டர் அல்போன்ஸ்!
நெல்லை : தமிழகத்தை வன்முறைக் களமாக மாற்ற மத்திய அரசு பின்னால் இருந்து இதுபோன்ற சீர்குலைப்பு வேலைகளை செய்கிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது என தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சு தமிழகத்தை வன்முறை சோதனைக் களமாக மாற்றும் வகையில் இருந்து வருவதாக பீட்டர் அல்போன்ஸ் விமர்சித்துள்ளார்.
மேலும், தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் கையெழுத்திட்டு, குடியரசு தலைவரிடம் மனு அளிக்கும் முடிவை சிறுபான்மை சமூகம் ஒட்டுமொத்தமாக ஆதரிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
ஆயிஷாவின் ரகசியங்களை வெளிப்படுத்திய விஷ்ணு.. கமல் முன்னிலையில் அப்படி பேசுவதற்கு இதுதான் காரணமாம்!!
எதிர்க்கட்சி தலைவர் போல ஆளுநர்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையிலும் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் பேசி வருகிறார். தமிழக அரசின் செயல்பாடுகளையும், நிர்வாகத்தையும் நிலைகுலைய வைக்கும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர்போல் ஆளுநர் பேசிவருவது தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை பாதிக்கும்.
ஆளுநரின் பதவிக்கு ஒவ்வாத பேச்சு
நாடு மதம் சார்ந்து இருக்க வேண்டும் என்று ஆளுநர் கூறுகிறார். இது அவரது பதவிக்கு ஒவ்வாத செயல். ஆளுநரின் பேச்சு அரசியல் சாசன அடிப்படைக் கூறுகளுக்கு எதிரானது. தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் கையெழுத்திட்டு, குடியரசு தலைவரிடம் மனு அளிக்கும் முடிவை சிறுபான்மை சமூகம் ஒட்டுமொத்தமாக ஆதரிக்கிறது.
சோதனைக் களமாக கோவை
கேரளா, தமிழக அரசுகளுக்கு எதிராக செயல்படும் ஆளுநர்கள் தங்களின் செயல்பாடுகளை கைவிட வேண்டும். சனாதானத்தின் சோதனைக் களமாக கோவையை, கொங்கு மண்டலத்தை மாற்ற முயற்சி நடக்கிறது. கோவை சம்பவத்தில் தமிழக போலீசார் துரிதமாக செயல்பட்டுள்ளனர். ஆனால் தமிழக காவல்துறையை அண்ணாமலை குற்றஞ்சாட்டுவது அரசியல் ஆதாயத்துக்காக செய்வதாகும். இதன்மூலம் தமிழகத்தில் காலூன்ற பாஜக முயல்கிறது.
பின்னணியில் மத்திய அரசு
தமிழகத்தை வன்முறைக் களமாக மாற்றவும், வெறுப்பு அரசியலை வேகமாக வளர்த்தெடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும் வகையிலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆளுநர் ரவி ஆகியோர் செயல்பட்டு வருகிறார்கள். மத்திய அரசு பின்னால் இருந்து இதுபோன்ற சீர்குலைப்பு வேலைகளை செய்கிறதோ? என்ற அச்சம் ஏற்படுகிறது. எங்கெல்லாம் மதக்கலவரம் நடந்து முடிந்ததோ அங்கெல்லாம் பாஜக ஆட்சிக்கு வந்திருக்கிறது. அது தமிழ்நாட்டில் நடக்காது.
குஜராத்துக்கு
உலக அளவிலான பெரிய முதலீடுகளை எல்லாம் குஜராத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் தேசிய சராசரி ஜிஎஸ்டியைவிட 12 சதவீதம் குறைவாகவே அந்த மாநிலம் அளிக்கிறது. ஆனால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் தேசிய சராசரியைவிட அதிகமாக ஜிஎஸ்டி செலுத்துகின்றன. இந்தி மொழியை மட்டும் அலுவல் மொழியாக்கினால் மத்திய அரசு பணியிடங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தமிழர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு விடும்.
காங்கிரஸை அழிக்க
அமித்ஷா சொல்வதுபோல் காங்கிரஸ் கட்சி அழிவின் விளிம்பில் இல்லை. காங்கிரஸ் கட்சியை அழிக்க இனி ஒருவர் பிறந்து தான் வர வேண்டும். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி பங்கேற்பார் என நம்புகிறோம். குஜராத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம்." எனத் தெரிவித்துள்ளார்.