சபாஷ்!மன்னார்குடியில் பவர்கட்.. உரிமையுடன் கேட்ட TRB ராஜா..உடனடியாக களத்தில் இறங்கிய செந்தில் பாலாஜி
திருவாரூர்: மன்னார்குடி துணை மின் நிலையத்தில் இடி தாக்கியதில் ஏற்பட்ட தீவிபத்தில் மன்னார்குடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்பு கொள்ள, வெறும் சில மணி நேரங்களில் மன்னார்குடி பகுதியில் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 2 நாட்களுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அரபிக்கடலில் சூறாவளி - கேரளாவில் நீடிக்கும் கனமழையால் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
இப்படிப் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சில இடங்களில் எதிர்பாராத காரணங்களால் மின்வெட்டும் ஏற்படுகிறது.
தீ விபத்து
அப்படி எதிர்பாராத வகையில் ஏற்படும் மின்வெட்டு பிரச்சினைகளைத் தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் துரிதமாகச் செயல்பட்டுச் சரி செய்து வருகின்றனர். அப்படியொரு சம்பவம் தான் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் நடந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (அக். 14) மாலை கனமழை பெய்தது. அப்போது திருவாரூர் மின் பகிர்மானத்துக்குட்பட்ட மன்னார்குடி துணை மின் நிலையத்தில் இடி தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் மன்னார்குடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
மின் விநியோகம் பாதிப்பு
தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்தால் மன்னார்குடி, கூத்தாநல்லூர், சித்தேரி மற்றும் வடபாதிமங்கலம் பகுதிகளில் மின் சேவை பாதிக்கப்பட்டது. இதையடுத்து மின் சேவையைச் சீர் செய்யும் பணிகளில் மின் துறை ஊழியர்கள் விரைந்து ஈடுபட்டனர். மற்றொரு மின் மாற்றி மூலமாக மின்சாரம் சீராகக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன.
டிஆர்பி ராஜா
இது தொடர்பாக மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா தனது ட்விட்டரில், "மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் தடை கூத்தாநல்லூர் அருகே மின்னல் தாக்கியதில் 33 KV மின் பாதையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்டுள்ள பழுது காரணமாக மூவாநல்லூர் துணை மின் நிலையத்தில் உயர் திறன் மின்மாற்றி பெரிய அளவில் பழுதாகி உள்ளது.அதன் காரணமாக மின்சாரம் தடைப்பட்டுள்ளது. திருவாரூரில் இருந்து சிறப்பு பராமரிப்பு பிரிவினர் விரைந்து வந்து சரி செய்யும் பணியை மேற்கொண்டுள்ளனர்" என்று பதிவிட்டிருந்தார்.
|
களத்தில் இறங்கிய டிஆர்பி ராஜா
மேலும், இது தொடர்பாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் களத்தில் இருந்த மின் துறை ஊழியர்களுடன் அவர் தொடர்பில் இருந்ததாகவே தெரிகிறது. மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் எந்தெந்த பகுதிகளில் மின் இணைப்பு சரி செய்யப்படுகிறது என்பது குறித்த அப்டேட்களை அவர் தனது ட்விட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இறுதியாக இரவு 11.30 மணியளவில் மன்னார்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜி
இதனை உறுதி செய்துள்ள மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டரில், "மன்னார்குடி துணை மின் நிலைய தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு தற்போது மின் விநியோகம் வழங்கப்பட்டது. மின்வாரிய பணியாளர்களுக்குப் பாராட்டுகள்" என்று குறிப்பிட்டார்.
குவியும் பாராட்டு
மின் துறை அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த டிஆர்பி ராஜா,"விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு கள நிலவரத்தை இரவு நேரத்திலும் தொடர்ந்து கவனித்து வரும் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என நன்றி தெரிவித்துள்ளார். மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட மின்வெட்டு பிரச்சினையை அமைச்சரும் எம்எல்ஏவும் இணைந்து விரைவாகச் சரி செய்ததைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.