ரயில் பயணிகளுக்கு கொரோனா தொற்று இல்லை- திருச்சி எஸ்.பி. செந்தில்குமார்
திருச்சி: ரயில் பயணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று திருச்சி ரயில்வே கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை, தடுப்பு நடவடிக்கைகளை ரயில்வே காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு தீவிரமாக மேற்க்கொண்டு வருகிறது. தமிழ்நாடு ரயில்வே காவல் துறையும் தடுப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதற்காக ரயில்வே காவலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. அதில், தெர்மல் ஸ்கேனர் மூலம் பயணிகளைப் பரிசோதனைச் செய்வது, கை கழுவுவது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
விழுப்புரம்- குமரி வரை சோதனை
திருச்சி ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட கன்னியாகுமரி முதல் விழுப்புரம் வரையிலான ரயில் நிலையங்களில் ரயில்வே காவலர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, தெர்மல் ஸ்கேனர் மூலம் அனைத்துப் பயணிகளையும் சோதனை செய்து வருகின்றனர். திருச்சியில் இன்று இயங்கும் அனைத்து ரயில்களில் பரிசோதனை செய்யப்பட்டது.
யாருக்கும் பாதிப்பு இல்லை
தற்போது வரை யாருக்கும் எவ்வித நோய் அறிகுறியும் தென்படவில்லை. ரயில் நிலையத்தில் ஒரு ஆம்புலன்சும், ஒரு மருத்துவர் தலைமையிலான மருத்துவ குழுவும் தயாராக உள்ளது. அறிகுறி இருக்கும் பயணிகள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கள்ளிக்குடியில் உள்ள சிறப்பு வார்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
பயணிகள் எண்ணிக்கை குறைவு
ஒரு காவல் ஆய்வாளர், ஒரு உதவி காவல் ஆய்வாளர், ஆறு காவலர்கள் உள்ளிட்ட காவல்துறை குழு சுழற்சிமுறையில் வழக்கமானப் பணியைத் தவிர்த்து கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 50 முதல் 60 விழுக்காடு வரை குறைந்துள்ளது. எனினும் தேவையற்றப் பயணங்களை மக்கள் தவிர்க்க வேண்டும், முன்பதிவு ரத்து செய்யப்பட்டால் உடனடியாகப் பணம் வங்கிக் கணக்கிற்கு சென்று விடும்.
தேவையற்ற பயணம் தவிர்ப்பீர்
அதனால், தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். அதே போல், நடைமேடைகளிலும் தேவையற்றவர்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவது கிடையாது. பிச்சைக்காரர்களும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அதனால் மக்கள் கூட்டம் கூடாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு செந்தில்குமார் கூறினார்.