என் பைக்கை ஓவர்டேக் பண்ணுவியா? பொங்கிய 'குங்பூ' மாஸ்டர்.. தாக்கப்பட்ட ஜொமோட்டோ ஊழியர்.. பரிதாபம்
வேலூரில் சாலையோரத்தில் மூர்ச்சையாகி கிடந்த ஜொமோட்டோ ஊழியரை ஏதேனும் வாகனம் இடித்துவிட்டு சென்றிருக்கலாம் என்றே போலீஸார் முதலில் கருதினர்.
வேலூர்: தனது பைக்கை வேகமாக முந்திச் சென்றதால் ஆத்திரமடைந்த குங்பூ மாஸ்டர் ஒருவர், ஜொமோட்டோ ஊழியரை கடுமையாக தாக்கியதில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முதலில் சாலையோரம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜொமோட்டோ ஊழியரை பார்த்து, அவர் விபத்தில் சிக்கி இருக்கலாம் என போலீஸார் கருதிய நிலையில், அவர் தாக்கப்படும் காட்சிகள் இணையத்தில் வைரலானதை அடுத்து குங்பூ
மாஸ்டரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சாலையில் சாதாரணமாக முந்திச் சென்ற ஒரே காரணத்துக்காக, ஒரு இளைஞர் உயிர் போகும் அளவுக்கு தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
42 லட்சம் பேர் இணைக்கவில்லை.. மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க இன்னும் 3 நாட்களே கால அவகாசம்!
மூர்ச்சையாகி கிடந்த ஜொமோட்டோ ஊழியர்
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிரே ஜோமோட்டோ ஊழியர் ஒருவர் பலத்த காயங்களுடன் மூர்ச்சையான நிலையில் கிடந்தார். அவரை பார்த்த அங்கிருந்த மக்கள் அவர் இறந்துவிட்டார் என நினைத்து, போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அங்கு சென்ற போலீஸார் அந்த ஜோமோட்டோ ஊழியரை பரிசோதித்தனர். அப்போது அவருக்கு மூச்சு மட்டும் இருப்பது தெரியவந்தது.
விபத்து வழக்கு பதிவு
இதையடுத்து, அவரை மீட்ட போலீஸார், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். விசாரணையில், அவர் வேலூர் மாவட்டம் உடுக்கத்தார் பகுதியைச் சேர்ந்த திருமலைவாசன் (22) என்பதும், குடும்ப வறுமை காரணமாக பாலிடெக்னிக் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஜோமோட்டாவில் உணவு டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, சாலையில் செல்லும் போது ஏதேனும் வாகனம் அவரை இடித்துவிட்டு சென்றிருக்கலாம் என கருதிய போலீஸார் முதலில் இதை விபத்து வழக்காக பதிவு செய்தனர்.
மூர்க்கத்தனமாக தாக்குதல்
பின்னர், ஜோமோட்டோ ஊழியர் ஒருவரை இரண்டு பேர் சேர்ந்து மிகக் கொடூரமாக தாக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலானது. இதை பார்த்த போலீஸார், அந்த ஊழியர்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திருமலைவாசன் என்பதை உறுதி செய்தனர். அந்த வீடியோவில், அவரை இரண்டு நபர்கள் சேர்ந்து மோசமாக தாக்குவதும், இதில் அவர் மூர்ச்சையாகி விழுவதும் தெரிகிறது. தொடர்ந்து, அந்த ஊழியரை அப்படியே சாலையோரத்தில் இருவரும் தூக்கி வீசுகின்றனர். அப்போது, இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து கேள்வியெழுப்பியவரை அவர்களில் ஒருவர் மிரட்டுவதுடன் அந்த வீடியோ முடிகிறது.
குங்பூ மாஸ்டர் கைது
இதையடுத்து, அந்த வீடியோவில் இருக்கும் நபர்களை போலீஸார் தேடி வந்தனர். அப்போது, திருமலைவாசனை தாக்கியது குங்பூ மாஸ்டர் பார்த்திபன் மற்றும் அவரது கூட்டாளி தணிகாச்சலம் என்பது தெரியவந்தது. இதையடுத்து, பார்த்திபனை பிடித்து போலீஸார் விசாரித்ததில், தனது பைக்கை திருமலைவாசன் முந்திச் சென்றதால் ஆத்திரம் அடைந்து அவரை தாக்கியதாக பார்த்திபன் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, போலீஸார் பார்த்திபனை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் தணிகாச்சலத்தை போலீஸார் தேடி வருகின்றனர்.