கின்னஸ் சாதனை.. அமெரிக்காவில் பகவத் கீதையை முழுமையாக பாராயணம் செய்து சாதித்த 1500 மாணவர்கள்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரே நேரத்தில் 1500 மாணவர்கள் முழுமையாக பகவத்கீதையை பாராயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
இந்து மத கலாச்சாரம் வெளிநாடுகளிலும் சில இடங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட பிரிட்டன் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி லண்டனில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
மேலும் மனைவி அக்சதா மூர்த்தியுடன் கோ - பூஜை செய்த அவர் மக்களிடம் கலந்துரையாடினார். அப்போது, ‛‛தனது கடினமான காலங்களில் பகவத் கீதையின் கருத்துகள் தனக்கு வலு சேர்க்கிறது'' என ரிஷி சுனக் கூறியிருந்தார். ரிஷி சுனக்கின் இந்த கருத்து மற்றும் கோ பூஜை செய்ததை இந்தியர்கள் வரவேற்றனர்.
அப்துல்கலாம் வீணை வாசிக்கும் சிலையும், பகவத்கீதை புத்தகமும் வைத்தது ஏன்? - கொதிக்கும் வைகோ
அமெரிக்காவில் நிகழ்ச்சி
இந்நிலையில் தான் தற்போது அமெரிக்காவில் பகவத் கீதையை ஒரே நேரத்தில் 1500 மாணவர்கள் முழுமையாக பாராயணம் செய்து புதிதாக கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். அதன்விபரம் வருமாறு: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண தலைநகராக டல்லாஸ் உள்ளது. இங்கு கீதா சஹஸ்ரகலா என்ற பெயரில் பகவத் கீதையை பாராயணம் செய்யும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பகவத் கீதை சிறந்தது
அவதூத தத்த பீடத்தின் சார்பில் ஆலன் நிகழ்வு மையத்தில் ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமிகளின் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமி ப்ரிஸ்கோவில் உள்ள காரிய சித்தி ஹனுமான் கோவிலின் நிறுவனர் ஆவார். "கீதா மஹாயஜ்னா" என்ற திட்டத்தை துவங்கி உள்ளார். இதன்மூலம் பகவத் கீதை ஒரு சிறந்த ஒன்று. சரியான சமஸ்கிருத பாராயணம் மற்றும் மனப்பாடம் செய்து ஒப்பிப்பதன் மூலம் நினைவாற்றலை அதிகரிக்கலாம் என மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
1500 பேர் பாராயணம்
இந்நிலையில் தான் பகவத் கீதையை சரளமாக படிக்கும் 700 பேருடன் 1500 மாணவர்கள் பங்கேற்று பகவத் கீதையை பாராயணம் செய்தனர். இது கின்னஸ் சாதனையாக மாறியது. பகவத் கீதையை பாராயணம் செய்து கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த ஓராண்டாக முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
கின்னஸ் சாதனை
அதாவது ஒரே நேரத்தில் இந்துக்களின் பகவத்கீதையை அதிகம் பேர் பாராயணம் செய்ததாக கூறி கின்னஸ் சாதனைக்கான சான்று வழங்கப்பட்டது. இந்த சாதனையை தொடர்ந்து பிரிஸ்கோ நகரத்தின் மேயர் ஆகஸ்ட் 13ம் தேதியை ‛கீதா சஹஸ்ரகலா தினம்' என்று அறிவித்துள்ளார்.
முந்தைய சாதனைகள்
முன்னதாக 2022 துவக்கத்தில் அகமதாபாத்தில் உள்ள தால்தேஜ் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுவன் பகவத்கீதையின் ஸ்லோகங்களை 64 நிமிடங்களில் படித்து கின்னஸ் உலக சாதனை படைத்தார். கொரோனா விடுமுறை காலத்தில் பகவத் கீதையை படிக்க துவங்கிய அவன் இந்த சாதனையை நிகழ்ச்சினார். அதற்கு முன்பு கடந்த ஆண்டு, ஒடிசாவைச் சேர்ந்த ஜகத்சிங்பூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபல கல்வியாளர் ரஷ்யமி மிஸ்ராவின் பேத்தியான 6 வயது சிறுமி, 108 ஆன்மிக மந்திரங்களை 24 நிமிடங்கள் 50 வினாடிகளில் படித்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்டில் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.