கேரளாவை அதிர வைக்கும் கறுப்பு பணம் கொள்ளை- 19 பேர் கைது- பாஜகவின் நடிகர் சுரேஷ் கோபியிடம் விசாரணை!
திருவனந்தபுரம்: கேரளாவில் பெரும் புயலை கிளப்பியுள்ள கறுப்பு பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் பாஜக, மார்க்சிஸ்ட் கட்சியினரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை வழக்கில் இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பாஜகவின் நடிகர் சுரேஷ் கோபியிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.
கேரளா சட்டசபை தேர்தலின் போது ஏப்ரல் 3-ந் தேதியன்று கொடக்கர என்ற இடத்தில் வேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ3.5 கோடி கறுப்பு பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டது. இந்த விசாரணையில் பாஜகவின் தேர்தல் செலவுகளுக்காக கொண்டு செல்லப்பட்ட பணம் இது என்பது தெரிய வந்தது.
பணம் கொள்ளை -19 பேர் கைது
இக் கொள்ளை சம்பவம் தொடர்பாக கேரளா சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணயில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் ரூ 1.25 கோடி பணம் மீட்கப்பட்டது. இக்கொள்ளை தொடர்பாக தர்மராஜன் உள்ளிட்ட 19 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கொள்ளை கும்பலுக்கு உதவியதாக பாஜக, மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகளும் போலீசார் விசாரணையில் சிக்கி உள்ளனர்.
பாஜக தலைவரின் உதவியாளர்களிடம் விசாரணை
கேரளா மாநில பாஜக தலைவர் சுரேந்தரனின் உதவியாளர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். சுரேந்திரன் உதவியாளர்களுக்கு, கொள்ளை வழக்கின் குற்றவாளி தர்மராஜை நன்கு தெரியும் என தெரிவித்துள்ளனர்.
நடிகர் சுரேஷ் கோபியிடம் விசாரணை
இதனிடையே பாஜகவின் திரிசூர் தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபியிடமும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். திரிசூர் தொகுதியில் பாஜகவின் தேர்தல் செலவுக்காகவே இந்த பணம் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது.
யாருக்காக? யாருடைய பணம்?
ஆகையால் இந்த பணம் யாரால் அனுப்பி வைக்கப்பட்டது? பணம் யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பாக சுரேஷ் கோபியிடம் விசாரிக்கப்பட உள்ளது. சுரேஷ் கோபியிடம் பதிவு செய்யப்படும் வாக்குமூலம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதால் கேரளா அரசியலில் பெரும் எதிர்பார்ப்பும் பரபரப்பும் நிலவுகிறது.