ஸ்டாலினுக்கு “மாஸ் வெல்கம்”.. தமிழக முதலமைச்சரை “ஹீரோ”போல் கொண்டாடும் “சேட்டன்ஸ்”! கேரளாவில் “பேனர்”
திருவனந்தபுரம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் கலந்துகொள்ள கேரளா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்று தலைநகர் திருவனந்தபுரத்தின் சாலைகளில் பேனர் வைத்து மலையாள மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
கேரள மாநிலம் கண்ணூரில் கடந்த ஏப்ரல் மாதம் 23வது மாநில மாநாடு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அவரது உரை கேரள மக்களை அதிகம் கவர்ந்தது.
இதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா சென்றார். அங்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து அவர் பேசினார்.
பராசக்தி ஹீரோடா! கணேசமூர்த்தி “சிவாஜி”ஆன கதை.. பின்னணியில் பெரியார், அண்ணா - முதல்வர் ஸ்டாலின் பதிவு
இந்திய கம்யூனிஸ்ட் மாநாடு
இந்த நிலையில் நேற்று கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் இன்று சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
ஸ்டாலின் கேரளா பயணம்
இந்த நிலையில் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள தலைநகர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சற்றுமுன் சென்றடைந்தார். அங்கு அவருக்கு கேரள மாநில வருவாய் மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர் கே.ராஜன், உணவுத் துறை அமைச்சர் ஜி.ஆர்.அணில் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
கேரள மக்கள் ஆதரவு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தமிழ்நாடு தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜும் கேரளா சென்று இருக்கிறார். கடந்த முறை நடைபெற்ற மார்க்சிஸ்ட் மாநாட்டில் மலையாளத்தில் பேசிய அசத்திய மு.க.ஸ்டாலின் கேரள மக்களின் மனங்களை கவர்ந்தார். தமிழ்நாட்டில் அவரது திட்டங்களும் நடவடிக்கைகளையும் கேரள மக்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வந்தனர்.
உற்சாக வரவேற்பு
இந்த நிலையில் இன்று கேரளா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்று திருவனந்தபுரத்தின் பல்வேறு பகுதிகளில் பேனர்கள் வைக்கப்பட்டு இருக்கின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்களில் வெல்கம் ஸ்டாலின் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.