மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை இலவசமாக வழங்கணும்.. மத்திய அரசை வலியுறுத்தி கேரள சட்டசபையில் தீர்மானம்!
திருவனந்தபுரம்: மத்திய அரசு, அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
தடுப்பூசி பற்றாக்குறை
தற்போது நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. ஆனால் நாட்டில் கடுமையான தடுப்பூசி பற்றாக்குறை நீடித்து வருகிறது. இதன் காரணமாக கடந்த மாதம் 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்ட திட்டம் கூட இன்னும் முழுமையாக தொடங்கப்படவில்லை.
கேரள சட்டசபையில் தீர்மானம்
ஒவ்வொரு மாநிலமும் கூடுதல் தடுப்பூசிகளை எதிர்பார்க்கின்றன. அதே வேளையில் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதால் மத்திய அரசு, மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்க வேண்டும் என்று கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் ஆதரவு
கேரளாவில் ஆளும் சிபிஐ (எம்) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தது. மாநில சுகாதார, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தீர்மானத்தை தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து ஆளும்கட்சி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவுடன் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.
அனைவரும் கைகோர்க்கணும்
இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், 'கொரோனா உடன் போராடுவதற்காக இலவச தடுப்பூசியை வழங்க வேண்டும், இது சமூகத்தின் அனைத்து பிரிவுகளும் வைரஸிலிருந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும். தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும், மத்திய அரசு தடுப்பூசியை இலவசமாக வழங்க உறுதி செய்வதற்கும் அனைத்து மாநிலங்களும் கைகோர்க்க வேண்டும், என்று வீணா ஜார்ஜ் கேட்டுக் கொண்டார்.