சிரிச்சது குத்தமா? தியேட்டரில் இளைஞரை பார்த்து சிரித்த மனைவி.. அடித்தே கொன்ற கணவன்.. பாய்ந்த ஆக்சன்!
திருவனந்தபுரம்: திரையரங்கில் இளைஞர் ஒருவரை பார்த்து தனது மனைவி சிரித்ததால் அவரை அடித்துக் கொலை செய்த தூத்துக்குடி நபருக்கு திருவனந்தபுரம் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (45).இவரது மனைவி கன்னியம்மாள் (38). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கூலித்தொழிலாளியான மாரியப்பன் கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீவர்கம் பகுதியில் தனது மனைவி, பிள்ளைகளுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். மாரியப்பனுக்கு தனது மனைவியை அடிக்கடி சந்தேகப்பட்டு அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார். பல நேரங்களில் அக்கம்பக்கத்தினர் இவர்களை சமாதானப்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி தனது மனைவியை அழைத்துக் கொண்டு அங்குள்ள திரையரங்கத்தில் படம் பார்ப்பதற்காக மாரியப்பன் சென்றுள்ளார். திரைப்படத்தின் இடைவெளியின் போது அங்கு அதே பகுதியில் வசிக்கும் இளைஞர் கன்னியம்மாளை பார்த்து சிரித்ததாகவும், பதிலுக்கு கன்னியம்மாளும் சிரித்ததாக தெரிகிறது.
இதையடுத்து, திரைப்படம் முடிந்து வீட்டுக்கு வந்த மாரியப்பன், "தியேட்டரில் அந்த இளைஞனை பார்த்து ஏன் சிரித்தாய்" எனக் கேட்டு தகராறு செய்துள்ளார். இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றியதில் கன்னியம்மாளை மாரியப்பன் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் கன்னியம்மாள் கீழே விழுந்துள்ளார். எனினும் ஆத்திரம் தீராத மாரியப்பன், வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து கன்னியம்மாளின் தலையில் அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கன்னியம்மாள் உயிரிழந்தார்.
இதனை பார்த்து பயந்து போன மாரியப்பன், தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த போலீஸார், மாரியப்பனை திருநெல்வேலியில் வைத்து இம்மாதத் தொடக்கத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு திருவனந்தபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் மாரியப்பனுக்கு எதிரான சாட்சியங்களை போலீஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இதையடுத்து, இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், மனைவி கன்னியம்மாளை கொலை செய்தற்காக மாரியப்பனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கே. விஷ்ணு தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கு விசாரணை 24 நாட்களிலேயே நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.