சபாஷ் 'டாக்டர்' கலெக்டர்- இன்ஸ்பெக்டர்!
கோவை: சாலையில் மயங்கி விழுந்த முன்னாள் ராணுவ வீரருக்கு கோவை மாவட்ட கலெக்டரும் உளவுப் பிரிவு இன்ஸ்பெக்டரும் முதலுதவி சிகிச்சை அளித்து அவரது உயிரைக் காத்தனர்.
சேலம் நீலவரப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சுந்தர சாம்பசிவம் (63) ஈசா யோக மையம் செல்ல கோவை வந்தார்.
செஞ்சிலுவைச் சங்கம் அருகிலுள்ள ஜவான்ஸ் பவனில் இருந்து வெளியே வந்த இவர், மயங்கி விழுந்தார். இதில் நெற்றி மற்றும் மூக்கில் இருந்து அவருக்கு ரத்தம் வழிந்தது. வலிப்பும் ஏற்பட்டது.
இதை பொது மக்கள் வேடிக்கை பார்த்தபடியே சென்றனர். அந்த வழியே சென்ற உளவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அவரை தனது மடியில் கிடத்தியபடி தனியார் மருத்துவமனை ஆம்புலன்சுக்கு போன் செய்தார். இதையடுத்து அங்கு கூட்டம் கூடியது.
அந்த வழியே காரில் சென்ற கோவை கலெக்டரான டாக்டர் உமாநாத் கூட்டத்தைக் கண்டு இறங்கி வந்தார். அவர் எம்பிபிஎஸ் டாக்டர் என்பதால், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார்.
இதையடுத்து சுந்தர சாம்பசிவம் மயக்கம் தெளிந்தார். ஆம்புலன்ஸ் வந்துவிடவே, அவரை அதில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டு அவரது அடையாள அட்டையை வைத்து அவரது மனைவிக்கு தகவலும் தந்தனர் கலெக்டரும் இன்ஸ்பெக்டரும்.