ரியாத்தில் ஈழத்தமிழ் கவிஞரின் கவிதை நூல் வெளியீட்டு விழா!
ரியாத்: இலங்கையைச் சேர்ந்த தமிழ்க் கவிஞர் இனியவன் இசாருத்தீனின் 'மழை நதி கடல்' என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழா ரியாத்தில் நடந்தது.
இலங்கையைச் சேர்ந்த தமிழ்க் கவிஞர் இனியவன் இசாருத்தீன் எழுதிய 'மழை நதி கடல்' என்னும் கவிதை நூலின் வெளியீட்டு விழா, மழையோ நதியோ கடலோ இல்லாத பாலைவன ரியாத் மாநகரில் உள்ள டுலிப் இன் (Tulip inn) என்னும் நட்சத்திர விடுதியில் எழுத்துக்கூடம் அமைப்பு சார்பில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு திரு. சுவாமிநாதன் தலைமைத் தாங்கினார். சவூதி அரேபியாவிற்கான இலங்கை துணைத் தூதர் எ. ஷபருல்லாஹ் கான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். ரியாத்தில் உள்ள இராணுவ மருத்துவமனையின் தலைமை மருத்துவர் திரு. எம்.எம். ஷஹீத் சிறப்புரை ஆற்றினார்.
திரு. இம்தியாஸ் நூலாசிரியர் பற்றி அறிமுக உரையாற்றினார்.
கவிஞர்கள் திரு. கே. வி. ராஜா, திருமதி. மலர்ச்செல்வி, திரு. ஜாஃபர் சாதிக், திரு.தங்கஸ்வாமி, திரு.வெற்றிவேல், திரு.ஸ்கந்த ராஜா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். திரு. ஜவஹர் சவரிமுத்து முதல் நூல் பிரதியை வெளியிட இலங்கைத் துணைத் தூதர் பெற்றுக்கொண்டார்.
கவிஞர் இப்னுஹம்துன் தனது ஆய்வுரையில் தற்போது தமிழில் கவிதைகளை விட கவிஞர்களே அதிகம் என்று நகைச்சுவையாகக் கூறினார். கவிஞர் இசாருத்தீனின் நூலில் காணப்பெறும் கவிநயங்களை, நுட்பங்களை சுட்டிக்காட்டினார்.
மன்னர் சவூத் பல்கலைக்கழகப் பேராசியர் மாசிலாமணி பாராட்டுரை அளித்தார்.
எழுத்துக்கூடப் பொறுப்பாளர் கவிமணி(இலக்கியர் ) ஷாஜஹான் நிகழ்ச்சியை சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.
ஏற்புரை ஆற்றிய நூலாசிரியர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். திரு. அப்துல் மன்னான் நன்றியுரையுடன் விழா முடிந்தது.