ஆடி வளர்பிறை பிரதோஷம்... சிவ ஆலயங்களில் கோலாகலம் - பக்தர்கள் வழிபாடு
ஆடி மாத வளர்பிறை பிரதோசத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் வழிபட்டனர்.
மதுரை: தமிழகம் முழுவதும் உள்ள சிவ ஆலயங்களில் ஆடி மாத வளர்பிறை பிரதோஷ வழிபாடு கோலாகலமாக நடைபெற்றது. மதுரை, கரூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பிரபல சிவ ஆலயங்களில் நந்தியம்பெருமானுக்கும் சிவ பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால் சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் ஆடி பிரதோஷ விழா நடைபெற்றது. இதையொட்டி சிவபெருமானுக்கு பால், பன்னீர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்பட 16 வகையான திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது.
லிங்க வடிவமான சிவபெருமானுக்கு முக வடிவ தோற்றமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் திரளாக கூடியிருந்து பய பக்தியுடன் சிவபெருமானை தரிசனம் செய்தனர்.
தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நந்தியம்பெருமானுக்கு வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு பால், வில்வம், மஞ்சள், சந்தனம், தயிர் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பிரதோஷத்தை காண வந்திருந்த பக்தர்கள் கோவில் பிரகாரத்தில் சமூக இடைவெளியுடன் அமரவைக்கப்பட்டனர்.
திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் நந்தியம்பெருமானுக்கும் சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ரிஷப வாகனத்தில் அம்மையும் அப்பனுமாக உற்சவமூர்த்திகள் வலம் வந்ததை ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
தமிழகத்தின் மையப்பகுதியான கரூர் நகரில் வீற்று அருள் பாலிக்கும், அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ செளந்தரநாயகி உடனுறையாகிய அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது. பசுபதீஸ்வரர் முன்பாக வீற்றிருக்கும் நந்தியம்பெருமானுக்கு விஷேச அபிஷேகங்கள் நடைபெற்றது. மஞ்சள், பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு நந்தி எம்பெருமானுக்கு விஷேச அபிஷேகங்கள் நடைபெற்றது.
பல்வேறு மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட நந்தி எம்பெருமானுக்கு விஷேச தீபாராதனைகளும், கற்பூர ஆரத்தி, நட்சத்திர ஆரத்திகளும், கோபுர ஆரத்திகளும் அதனை தொடர்ந்து மகா தீபாராதனைகளும் நடைபெற்றது.
பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கொரோனா இடைவெளியினை கடைபிடித்து கலந்து கொண்டு நந்தி எம்பெருமான் கொம்புகளின் நடுவே ஈசனை தரிசித்து அருள் பெற்றனர். இதற்கான முழு ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினரும், கோயில் நிர்வாகத்தினரும் சிறப்பாக செய்திருந்தனர்.