கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் பக்தர்கள் வழிபாடு - சரஸ்வதி ஆலயங்கள் எங்கெங்கு இருக்கு தெரியுமா
இந்தியாவிலேயே சரஸ்வதிக்கு என்று தனிக் கோயில் அமைந்துள்ளது கூத்தனூரில்தான் ஒட்டக் கூத்தன் எனும் தமிழ் கவிஞனுக்கு சரஸ்வதிதேவியின் அருள் கிடைக்கப் பெற்று, ஒட்டக்கூத்தன் வழிபட்டதால் கூத்தனூர் என பெயர் பெற்றது.
திருவாரூர் : சரஸ்வதி பூஜையை முன்னிட்டு புகழ்பெற்ற கூத்தனூர் சரஸ்வதி ஆலயத்தில் இன்று ஏராளமானோர் வழிபட்டனர். குழந்தைகளை அழைத்து வந்து நோட்டு புத்தகங்கள், பேனாக்களை வழிபட்டு கல்வி சிறக்க வேண்டிக் கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கூத்தனூரில் மகாசரஸ்வதி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் சரஸ்வதி பூஜை விழா ஒவ்வொரு வருடமும் மிகவும் சிறப்பாக கொண்டாடபடுவது வழக்கம்.அதன்படி இந்த வருடம் அரசின் வழிகாட்டும் நெறிமுறைகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர் .
இந்தியாவிலேயே சரஸ்வதிக்கு என்று தனிக் கோயில் அமைந்துள்ளது கூத்தனூரில்தான் ஒட்டக் கூத்தன் எனும் தமிழ் கவிஞனுக்கு சரஸ்வதிதேவியின் அருள் கிடைக்கப் பெற்று, ஒட்டக்கூத்தன் வழிபட்டதால் கூத்தனூர் என பெயர் பெற்றது. கவிபாடும் திறன் வேண்டி கலைமகளை பூஜிக்க நினைத்தார் ஒட்டக்கூத்தர். கூத்தனூரில் பூந்தோட்டம் ஒன்றை அமைத்து தட்சிணாவாகினியாய் ஓடும் அரிசொல் மாநதியின் நீரால் அபிஷேகம் செய்து நாள்தோறும் அம்பிகையை வழிபட்டு வந்தார். ஒட்டக்கூத்தரின் தொண்டில் மகிழ்ந்த நாமகள் தன் வாய் மணமாம் தாம்பூலத்தை அவருக்கு கொடுத்து வரகவி ஆக்கினாள் என்பர். தனக்கு பேரருள் புரிந்த கூத்தனூர் சரஸ்வதியை ஆற்றுக்கரை சொற்கிழத்தி வாழிய என்று பரணி பாடியுள்ளார் ஒட்டக்கூத்தர்.
சீனியர் என்ற திமிரா.. தோனி கிட்ட இப்படி பண்ண முடியுமா? அஸ்வின் செய்த காரியம்.. பெரும் சர்ச்சை
சரஸ்வதி ஆலயம்
கருவறையில் வெண்ணிற ஆடை தரித்து வெண் தாமரையில் பேரெழிலோடு வீற்றிருக்கிறாள் சரஸ்வதி. முதலாக அட்சராப்பியாசம் என்கிற கல்வியைத் தொடங்கும் குழந்தைகள் இங்கு வந்து ஆரம்பிக்கிறார்கள். மாதந்தோறும் கலைமகளுக்கு பவுர்ணமி அன்று மாலையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளும், மூல நட்சத்திரம் அன்று சிறப்பு அபிஷேகம் உண்டு. சரஸ்வதி பூஜை அன்று அம்பிகையின் பாதங்களில் பக்தர்கள் மலரிட்டு அர்ச்சனை செய்யலாம். இந்த வருடம் நவராத்திரி நிகழ்ச்சிகள் 12 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது, ஒன்பதாவது நாளான இன்று சரஸ்வதி பூஜை பாத தரிசனம் நடைபெற்றது.. ஒவ்வொரு நாளும் நடைபெறுகின்ற கலை நிகழ்சிகள் இந்த வருடம் நடைபெறவில்லை. இன்றைய தினம் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு புகழ்பெற்ற கூத்தனூர் சரஸ்வதி ஆலயத்தில் இன்று ஏராளமானோர் வழிபட்டனர். குழந்தைகளை அழைத்து வந்து நோட்டு புத்தகம், பேனா, சிலேட்டு போன்றவற்றை சரஸ்வதி அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்து எடுத்துச் சென்றனர்.
விஜயதசமி
விஜயதசமி இக்கோவிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு மிக முக்கியமான விழா. விஜயதசமியன்று காலை ருத்ராபிஷேகம் நடைபெறும். தேர்வுக்குச் செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் வெற்றி பெறவும் மற்றும் பள்ளி சேர்க்கைக்கு முன்னர் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்கவும் கல்விக்கடவுளாம் இச்சரஸ்வதி அம்மனை வழிபட்டு பயனடைகின்றனர். ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் குழந்தைகளை பெற்றோர்கள் நாளை விஜயதசமியன்று இங்கு அழைத்து வந்து சரஸ்வதி அம்மனை தரிசித்து செல்வது வழக்கம். இந்த வருடம் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நாளை பக்தர்கள் தரிசனம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாணியம்பாடி
பிரம்மாவின் சாபத்தால் வாணி பேசும் சக்தியை இழந்தாள். ஆனால், வாணியம்பாடியில் உள்ள அதிதீஸ்வரரையும், பெரியநாயகியையும் பூஜித்து தன்னுடைய இயல்பை பெற்றாள். சிவனும், பார்வதியும் வாணிக்கு அருள் செய்ததோடு அவளைப் பாடும்படியும் கூறினர். அப்படி தெய்வ தம்பதியின் அருளாணையை ஏற்று வாணி அழகாகப் பாடியதால் வாணியம்பாடி என்றானது. ஆலயத்தின் முகப்பிலேயே சிவ- பார்வதியை கலைவாணி வழிபடும் சுதைச் சிற்பம் உள்ளது. தனிச் சந்நதியில் வீணை ஏந்திய வாணி அருள்கிறாள். வேலூர் - கிருஷ்ணகிரி பாதையில் இத் தலம் அமைந்துள்ளது.
வீணையில்லாத சரஸ்வதி
வேதாரண்யம் வேதங்களே ஈசனை வணங்கிய தலம். இக்கோயிலின் பிராகாரத்தில் மிகப்பெரிய சரஸ்வதி வீற்றிருக்கிறாள். இத்தலத்து நாயகியான உமையம்மையின் குரல் யாழைவிட இனிமையானது என்பதால், தான் வீணையில்லாது அமர்ந்திருக்கிறாள். அதனாலேயே இத்தலத்து அம்பாளின் திருப்பெயர் யாழைப் பழித்த மொழியம்மை.
சிருங்கேரி சாரதாதேவி
கர்நாடகா சிருங்கேரி சாரதாதேவி பீடம் உள்ளது. சாரதா தேவி கோவில் துங்கபத்ரா நதிக்கரையில் உள்ளது. ஆதி சங்கரர் உருவாக்கிய இந்த பீடத்தில் அன்னை சரஸ்வதிக்கு கோவில் உள்ளது. சிருங்கேரியில் உள்ள சாரதா தேவியானவள் 'பிரம்ம வித்யா' சொரூபமாக அதாவது பிரம்ம, விஷ்ணு, சிவன் மற்றும் சக்தி சொரூபங்களாகிய சரஸ்வதி, லட்சுமி, பார்வதி அனைவரையும் உள்ளடக்கிய ஒரே சொரூபமாக ஸ்ரீ சக்கரத்தின் மேல் சிம்மாசனத்தில் அமர்ந்து வேண்டுவோருக்கு வேண்டுவன எல்லாம் தருகிறாள். அறிவுக்கும் கல்விக்கும் கடவுளான சாராதாம் பாவுக்காக நிர்மானிக்கப்பட்டுள்ள இந்த தட்சணாம்னய பீடம் ஆச்சார்யர் ஸ்ரீ சங்கர பகவத்பாதரால் 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும் 14ஆம் நூற்றாண்டில் சந்தன மரத்தால் இருந்த பழைய சிலை புதுப்பிக்கப்பட்டு தங்கம் மற்றும் கல்லால் உருவாக்கப்பட்டதாகவும் நம்பிக்கைகள் நிலவுகின்றன.
கேரளா சரஸ்வதி கோவில்
கேரளா கோட்டையம் அருகே பனச்சிக்காடு சரஸ்வதி கோவில் உள்ளது. கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் தட்சிண மூகாம்பிகா கோவில் உள்ளது. இது பிரபல சரஸ்வதி கோவில். குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்கும், கலைஞர்களின் கலை வளர்ச்சிக்கும், குழந்தைப்பேறுக்கும் அருள்புரியும் சரஸ்வதி தேவி கோவில் பனச்சிக்காடு என்னும் திருத்தலத்தில் உள்ளது. இந்த ஆலயம் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சிங்கவனம் நகருக்கருகில் அமைந்திருக்கிறது. குழந்தையில்லாத தம்பதியர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து சரஸ்வதி தேவியின் மதிய வழிபாட்டில் பயன்படுத்தப்படும் பால், சர்க்கரை மற்றும் பச்சரிசி சேர்த்துச் செய்யப்படும் பாயசத்தைப் பெற்றுச் சாப்பிட்டால், விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.
அரிசியில் எழுதும் குழந்தைகள்
தங்களுடைய குழந்தைகளின் கல்வி சிறப்பாக அமைந்திட விரும்பும் பெற்றோர்கள், தங்கள் குழந்தையின் பிறந்த நாளின் போதோ அல்லது குழந்தையைப் பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பாகவோ, தங்கள் குழந்தையுடன் இந்தக் கோவிலுக்கு வந்து பஞ்சாமிர்தம், பால்பாயசம் போன்றவற்றைப் படைத்து, தங்கள் குழந்தைகளின் கல்வித் தொடக்கத்திற்கான சிறப்பு வழிபாடுகளை செய்கின்றனர். புத்தாடை அணிவித்து, சரஸ்வதி தேவியை வணங்கி, தங்கள் குழந்தையின் விரல் பிடித்து அரிசியில் எழுத வைக்கின்றனர். குழந்தையின் பெற்றோர் இந்த அரிசியில் சிறிதைத் தங்கள் வீட்டுக்குக் கொண்டு செல்வதற்காகக் கேட்டுப் பெற்றுச் செல்கின்றனர். சரஸ்வதி பூஜை கொண்டாடப்படும் இந்த நேரத்தில் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள சரஸ்வதி கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். வீட்டிலேயே சரஸ்வதி படத்திற்கு முன்பாகவும் குழந்தைகளை எழுத வைக்கலாம்.
ஞானசரஸ்வதி
தெலுங்கானாவில் ஞான சரஸ்வதி கோவில் உள்ளது. வர்கல் என்ற கிராமத்தில் சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. நிறைய பேர் தங்களின் குழந்தைகளின் வித்யாரம்பத்தை அங்கு செய்வார்கள். பாசர் வித்யா சரஸ்வதி கோவில் இது அடிலாபாத் ஜில்லாவில் உள்ளது. நிஜாம்பாத் செல்லும் அனைத்து இரயில்களும் இங்கு நிற்கும் ஸ்ரீ வித்யா சரஸ்வதி கோவில் வாரங்கால் மாவட்டத்தில் உள்ளது. காளீஸ்வரம் மகா சரஸ்வதி கோவில் சிறப்பு வாய்ந்த கோவில்.