மேல்மலையனூர் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ரத்து - சதுரகிரி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதியில்லை
மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுவதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை: கொரோனா பரவலை கருத்தில்கொண்டு, இம்மாதம் மேல்மலையனூர் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்று மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில். இந்த ஆலயத்தில் மாதந்தோறும் அமாவாசை நாளில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தைக் காண லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள்.
பார்வதிதேவி பிரம்மனின் கபாலத்தை அழித்து, சிவபெருமானுடன் இங்கு சாப விமோச்சனம் பெற்றதினால் இந்த ஆலயம் சென்று வழிபட்டால் பிரச்னைகள், சாபங்கள் தீரும் என்பது நம்பிக்கை. மாசி மாத அமாவாசை அன்று, மேல்மலையனூரில் நடைபெறும் மயானக்கொள்ளைத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகப் பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு ஒன்று திரண்டு, மயானத்தில் கொள்ளைவிட்டு, அன்னையை மனமுருக வேண்டி அருள் பெற்றுச் செல்வார்கள்.
கொரோனா பெருந்தொற்று பரவத்தொடங்கியதால் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் அவ்வப்போது தடைபட்டு வந்தது. அதன்படி இம்முறையும் கொரோனா தொற்றின் காரணமாகவே ஊஞ்சல் உற்சவம் தடைசெய்யப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி அரசின் வழிகாட்டுதல் விதிமுறைக்கு உட்பட்டு வருகின்ற 04.11.2021 வியாழக்கிழமை அமாவாசை அன்று நடைபெற இருந்த மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுகிறது.
பிரம்மனின் ஐந்தாவது தலையை தன் கரத்தினால் கொய்த சிவபெருமான், பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆளானார். பிரம்மனின் கபாலமும் அவரது திருக்கரத்தில் ஒட்டிக்கொண்டது. மேலும், சரஸ்வதியின் சாபத்தால் தற்போது மேல்மலையனூர் என அழைக்கப்படும் பகுதிக்குப் புற்றில் பாம்பாக பார்வதிதேவியும் சிறிது காலம் வாழ நேர்ந்தது. கபாலியாக சுற்றி வந்த சிவபெருமான், ஒருமுறை இங்கு நேரில் வந்தபோது அவரது கரத்தில் ஒட்டியிருந்த கபாலத்தை அழித்து சிவபெருமானும், பார்வதி தேவியாரும் இங்கு சாபவிமோசனம் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது.
அம்மன் இங்கு புற்றில் பாம்பாக இருந்ததால், அவள் இன்றளவும் அவ்வாறே காட்சி தருவதாக நம்பும் பக்தர்கள் அப்புற்றினை வணங்கி, அம்மண்ணை நெற்றியில் பூசி வழிபட திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாகும்.
தீபாவளி நாளான நாளை நவம்பர் 4ஆம் தேதி அமாவாசை நாள் ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்பட்டாலும் வழக்கமான தரிசனத்திற்கு மட்டுமே பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பிலும் அன்றைய தினம் சிறப்பு பேருந்துகள் ஏதும் இயக்கப்படாது எனவும் திருக்கோயில் நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செயல் அலுவலர் ராமு அறிவித்துள்ளார்.
சதுரகிரியில் பக்தர்களுக்குத் தடை
கனமழை பெய்து வருவதன் காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் ஆலயத்தில் பிரதோஷம் தொடங்கி அமாவாசை மறு தினம் வரை சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் பௌர்ணமி ,அமாவாசை தினங்களில் சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம். தற்போது கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சதுரகிரியில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்த தடை விதிக்கப்பட்டது. கடந்த பவுர்ணமி நாளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஐப்பசி பிரதோஷம் தொடங்கி நாளை அமாவாசை வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் யாரும் தாணிப்பாறை மலை அடிவாரம் மற்றும் சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.