பூண்டி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - 14ஆம் தேதி தேர்பவனி
பூண்டி மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா ஞாயிறன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தஞ்சை: பூண்டி மாத பேராலயத்தின் ஆண்டு திருவிழா ஞாயிறன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14ஆம் தேதி இரவு அலங்கார தேர்பவனி நடக்கிறது.
திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் அமைந்துள்ளது. பூலோகம் போற்றும் பூண்டிமாதா என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த பேராலயத்தின் ஆண்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா ஞாயிறன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பூண்டி மாதாவின் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதை தொடர்ந்து ஊர்வலம் கொடிமேடையை அடைந்தது. பின்னர் கும்பகோணம் பிஷப் அந்தோணிசாமி அடிகளார் கொடியை ஏற்றி வைத்தார்.
இதையடுத்து மரியா- திருத்தூதர்களின் அன்னை என்ற தலைப்பில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. திருப்பலியை கும்பகோணம் பிஷப் அந்தோணிசாமி நிறைவேற்றினார். இதில் மறைவட்ட முதன்மை குரு அந்தோணிஜோசப், பூண்டி மாதா பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியானமைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்கு தந்தையர்கள் அமலதாஸ், எடிசன்ராஜ், ஆன்மிக தந்தை அருளானந்தம் மற்றும் மறை மாவட்ட அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழா நாட்களில் தினமும் சிறு சப்பர பவனியும், திருப்பலியும் நடைபெறுகிறது. வருகிற 14ஆம் தேதி இரவு அலங்கார தேர்பவனி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் பாக்கியசாமி தலைமை யிலான குழுவினர் செய்து வருகின்றனர்.