சபரிமலை ஐயப்பன் கோவில் மாசி மாத பூஜை...12ல் கோவில் திறப்பு - தினசரி 15ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி
சபரிமலையில் மாசி மாத பூஜையில் பங்கேற்க தினமும் பதினைந்தாயிரம் பக்தர்களை அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சபரிமலை: மாசி மாதம் நடைபெறும் வழக்கமான மாதாந்திர பூஜைகளை, முன்னிட்டு வரும் பிப்ரவரி 12ஆம் தேதியன்று சபரிமலை நடை திறக்கப்பட்டு 17ஆம் தேதி வரையில் பூஜைகள் நடைபெறும். இப்பூஜையில் பங்கேற்க தினமும் 15000 பக்தர்களை அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.
கேரளா மாநிலம் சபரிமலையில், ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்று பின்னர் நடை சாத்தப்படும். கார்த்திகை முதல் தை மாதம் வரை மண்டல பூஜை தொடங்கி மகர விளக்கு, மகர ஜோதி தரிசனம் வரை நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருவதுண்டு. இதனால் வழக்கமாக நடை சாத்தப்படாமல் தொடர்ந்து பூஜைகள் நடைபெறும்.

கடந்த ஆண்டு மண்டல பூஜை, மகர விளக்கு, மகர ஜோதி தரிசனத்தை முன்னிட்டு கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டு, வழக்கமான மண்டல பூஜை, மகர விளக்கு, மகர ஜோதி தரிசன நிகழ்வுகளை அடுத்து கடந்த மாதம் 20ஆம் தேதி சபரிமலை நடை சாத்தப்பட்டது.
தற்போது, மாசி மாதம் நடைபெறும் வழக்கமான மாதாந்திர பூஜைகளை முன்னிட்டு வரும் 12ஆம் தேதியன்று மாலை 5 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்படுகிறது.
மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து தீபம் ஏற்றுவார். நடை திறக்கப்படும் அன்று மேற்கொண்டு எந்த விதமான விசேஷ பூஜைகளும் நடைபெறாது. வழக்கமாக அன்று இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படும்.
பின்னர் 13ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு வழக்கமாக நடை திறக்கப்பட்டு, தந்திரி கண்டரரு மோகனரரு அபிஷேகம் செய்து, நெய் அபிஷேகத்தை தொடங்கி வைப்பார். அன்றைய தினம் முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். தினசரியும் கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமாக நடைபெறும் படிபூஜை உள்ளிட்ட அனைத்து பூஜைகளும் நடைபெறும். 17ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்.
மாசி மாத பூஜையில் பங்கேற்க தினமும் பதினைந்தாயிரம் பக்தர்களை அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவும் நேற்று தொடங்கியது.
இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருப்பவர்கள் அல்லது 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் கொரோனா பரிசோதனை முடிவு நெகடிவ் என்ற சான்றிதழ் பெற்றவர்கள் தங்களின் முன்பதிவு கூப்பனுடன் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications