பாவங்கள் போக்கும் ரதசப்தமி 2021- சூரியனை விரதமிருந்து வணங்கினால் தோஷங்கள் நீங்கும் #Rathasaptami
ரத சப்தமி நாளில் சூரியபகவானை நினைத்து விரதம் இருந்து வணங்கினால் நன்மைகள் நடைபெறும். பாவங்கள் தீரும் என்பது நம்பிக்கை.
மதுரை: ரதசப்தமி என்பது மகா சப்தமி என்றும் சூரிய ஜெயந்தியாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ரத சப்தமி நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை பிப்ரவரி 19ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ரத சப்தமி நாளில் விரதம் இருந்தால் இந்த ஏழு வகையான பாவங்களும் நீங்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
சூரிய பகவான் தன்னுடைய ஏழு குதிரைகளையும் தென் திசையிலிருந்து வட திசைக்கு நகர்த்தி செல்லும் காலத்தின் துவக்கமாக இந்த ரத சப்தமி அமைகிறது. சூரிய பகவானின் ஏழு குதிரைகளும் வானவில்லின் ஏழு வண்ணங்களையும் 12 சக்கரங்களும் 12 ராசிகளையும் குறிக்கும் வண்ணம் அமைகிறது. ரத சப்தமி நாளில் சூரிய பகவானை வணங்குவதன் மூலம் அளவற்ற நன்மைகளை பெற முடியும். இந்த நாளில் விரதம் இருப்பதன் மூலம் நம்முடைய எல்ல வகையான பாவங்களும் தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.
தை அமாவாசையில் இருந்து ஏழாவது நாள் வளர்பிறை சப்தமி திதி ரத சப்தமியாக கொண்டாடப்படுகிறது. ரத சப்தமி நாளில் திருமலை திருப்பதியில் உற்சவர் மலையப்பசாமி ஏழு வாகனங்களில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது விஷேசமாகும்.
ரதசப்தமி விரதம்
ரத சப்தமி நாளில் சூரிய பகவானை வணங்குவதன் மூலம் அளவற்ற நன்மைகளை பெற முடியும். இந்த நாளில் விரதம் இருப்பதன் மூலம் நம்முடைய அனைத்து பாவங்களையும் அகற்ற முடியும். அறிந்தும் அறியாமலும், நம் உடலாலும் உள்ளத்தாலும் இந்த பிறப்பிலும் இதற்கு முந்தைய பிறப்பிலும் நாம் ஏழு வகையான பவங்களை செய்திருக்கிறோம் என புராணங்கள் கூறுகின்றன.
பாவங்கள் நீங்கும்
ரத சப்தமி நாளில் விரதம் இருந்தால் இந்த ஏழு வகையான பாவங்களும் நீங்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. ரத சப்தமி அன்று விரதம் மேற்கொண்டு, எருக்கன் இலைகளைத் தலையில் வைத்துக்கொண்டு சாஸ்திரத்தில் சொல்லியபடி நீராடினால் தெரிந்தோ, தெரியாமலோ, செய்த பாவங்கள் நீங்கும்.
புண்ணியம் தரும் ரத சப்தமி விரதம்
ரதசப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பலமடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும். பெண்கள் உயர்நிலையை அடைவர். கணவனை இழந்தவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்கின்றன புராணங்கள். இந்த நாள் தியானம், யோகா செய்ய சிறந்தது. சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆக உயர்வார்கள் என்கின்றது புராணம்.
திருமலையில் பிரம்மோற்சவம்
சூரிய பகவானை ஆராதிக்கும் இந்ததிருநாளில் சூரியபகவானின் அதிதேவனான நாராயனணும் கொண்டாடப்படுகிறார். அதனால் தான் திருமலை திருப்பதியில் இந்த நாளில் ஒரு நாள் பிரம்மோற்சவ விழா நடத்தப்படுகிறது. இன்று நடைபெறும் ஒரு நாள் ரதசப்தமி பிரம்மோற்சவத்தில் மலையப்பசுவாமி விதவிதமான அலங்காரங்களில் வீதி உலா வருவார். அன்றைய தினம் ஒரே நாளில் ஏழு வித வாகனங்களில் ஏழுமலையான் வீதி உலா வருவார்.
பக்தர்களுக்கு தரிசனம்
ரத சப்தமி நாளில் திருப்பதியில் உற்சவர் மலையப்பசாமி ஒரே நாளில் அதிகாலை காலை முதல் இரவு வரை 7 வாகன சேவைகளில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். வாகன வீதிஉலாவுக்கு முன்னால் கோலாட்டம், பரத நாட்டியம், நாட்டுப்புற நடனம் ஆகியவை நடைபெறுகின்றன. புரட்டாசி பிரம்மோற்சவத்தை காணமுடியாதவர்கள் இந்த ஒரு நாள் ரத சப்தமி பிரமோற்சவத்தை கண்டு மகிழலாம்.
பீஷ்மாஷ்டமி
ரத சப்தமிக்கு அடுத்த நாள் அஷ்டமி திதி. இந்த அஷ்டமி திதியை பீஷ்மாஷ்டமியாக அனுஷ்டிக்கின்றனர். அன்று புனிதநீர் நிலைக்குச் சென்று பீஷ்மருக்கான தர்ப்பணமும் நம்மில் வாழ்ந்த முன்னோர்களுக்காக பித்ரு பூஜையும் செய்தால், சுகமான வாழ்வு நிரந்தரமாகக் கிட்டும் என்பது நம்பிக்கை.