பிஎச்டி வேண்டாம்.. கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் ஆக விரும்புபவர்களுக்கு யுஜிசி குட்நியூஸ்
டெல்லி : பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர முனைவர் பட்டம் தேவையில்லை என பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. உதவிப் பேராசிரியர் பணியில் சேர முனைவர் பட்டம் பெற்றிருத்தல் கட்டாயம் என்ற திருத்தப்பட்ட விதிமுறை 2023-ம் ஆண்டு ஜூலை வரை தள்ளி வைக்கப்படுவதாகவும் யுஜிசி அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாகப் பணிபுரிவோர் கண்டிப்பாக பிஹெச்டி (டாக்டர்) பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று மத்திய அரசு அண்மையில் திருத்தம் கொண்டுவந்தது.
கல்வியில் தரத்தை உயர்த்த வேண்டும், கற்பித்தலில் தரத்தை உயர்த்தும் நோக்கில் இந்த விதிமுறையில் பல்கலைக்கழக மானியக் குழு திருத்தம் கொண்டுவந்தது. இந்த விதிமுறை 2021-22 கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டது,

தர்மேந்திர பிரதான்
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர்களாகப் பணிபுரிவதற்கு முனைவர் பட்டம் பெற்றிருத்தல் கட்டாயமில்லை. அந்த விதிமுறை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டால்தான், மத்தியப் பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் பேராசிரியர் இடங்களை நிரப்ப முடியும்" என்று கூறியிருந்தார்.

இரண்டு வருடம்
இதையடுத்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் ரஜ்னிஷ் ஜெயின் அனைத்துப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கும், பல்கலைக்கழக கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர முனைவர் பட்டம் பெற்றிருத்தல் கட்டாயம் என்ற திருத்தப்பட்ட விதிமுறை 2023-ம் ஆண்டு ஜூலை வரை தள்ளி வைக்கப்படுவதாக கூறியுள்ளார்.

பிஎச்டி தேவையில்லை
அந்த கடிதத்தில் உள்ள தகவலின் படி, உதவிப் பேராசிரியர்களாகப் பணிக்கு வருவோர் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் முனைவர் பட்டம் இல்லாமல் சேர முடியும். முதுநிலைப் பட்டமும், யுஜிசியின் நெட் தேர்வு அல்லது தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலே அவர்கள் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதியானவர்கள் ஆவர் இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

6 ஆயிரம் பணியிடங்கள்
அண்மையில் கொண்டுவரப்பட்ட விதிமுறையின் படி முனைவர் பட்டம் பெற்றவர்கள் மட்டும்தான் உதவிப் பேராசிரியர் பணிக்கு வரமுடியும் என்ற விதியை நடைமுறைப்படுத்தினால், அதற்கு நீண்டகாலம் ஆகலாம். இதனால் பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதில் காலதாமதம் ஏற்படும். எனவே தான் இதை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது. இனி மத்தியப் பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர் காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications