""ஸ்டிரைக்கில் ஈடுபடுபட்டால் "எஸ்மா" சட்டம் பாயும்"": அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை
சென்னை:
காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் குதித்தால் அவர்கள் மீது "அத்தியாவசியபணிப் பராமரிப்பு சட்டம்" (எஸ்மா) பாயும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
போனஸ், சரண்டர் விடுப்பு உள்ளிட்ட 19 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்சங்கம் (ஜேக்டோ-ஜியோ) உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில்ஈடுபடவுள்ளனர்.
அரசு ஊழியர்களின் அகவிலைப் படியை 4 சதவீதம் உயர்த்தினால் அவர்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிட்டுவிடுவார்கள் என்று தமிழக அரசு நினைத்தது. அதன்படி நேற்று மாலை இந்த அகவிலைப் படி உயர்வையும் தமிழகமுதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
ஆனால் இதற்கெல்லாம் மசியாத அரசு ஊழியர்கள், மற்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டமிட்டபடிவேலைநிறுத்தம் தொடங்கும் என்று உறுதியாக அறிவித்து விட்டனர்.
இதையடுத்து தமிழக அரசு அடுத்த அஸ்திரத்தை இன்று எடுத்துள்ளது. வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அரசுஊழியர்கள் மீது "எஸ்மா" சட்டம் பாயும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
அரசுக்குத் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்காகவே சில கடினமான நடவடிக்கைகள்எடுக்கப்பட்டுள்ளன. இதற்கு ஊழியர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
அதை விட்டுவிட்டு அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் தேவையில்லாதது.மக்களுக்கும் மக்கள் நலனுக்கும் எதிரானதும் கூட.
வேலைக்கு வராத நாட்கள் கணக்கிடப்பட்டு அந்த நாட்களுக்கு அரசு ஊழியர்களின் சம்பளத் தொகைகுறைக்கப்படும்.
மேலும் "எஸ்மா" சட்டத்தின் கீழும் வேலைநிறுத்தம் மேற்கொள்ளும் அரசு ஊழியர்கள் மீது கடுமையானநடவடிக்கை எடுக்கப்படும்.
வேலைநிறுத்தப் போராட்டத்தையும் மீறி பணிக்கு வர விரும்பும் அரசு ஊழியர்களைத் தடுத்து நிறுத்துபவர்களும்கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்.
எனவே அரசு ஊழியர்கள் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.