ஹோட்டல்களுக்கான சமையல் கேஸ் விலை கிடு கிடு உயர்வு!
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உயர்ந்து வருவதால் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலையை பெருமளவில் அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அதிகரித்து வருகிறது.
இது தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசை அணத்தி வருகின்றன. ஆனால் தேர்தலை மனதில் கொண்டு மத்திய அரசு இதைத் தள்ளிப் போட்டுக் கொண்டு வருகிறது.
இதனால் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் கோடிக்கணக்கான ரூபாயை நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
வீட்டு உபயோகத்திற்கு மானிய விலையில் தரப்படும் காஸ் விலையை உயர்த்த முடியாமல் இருக்கும் எண்ணெய் நிறுவனங்கள், கடந்த டிசம்பர் 1ம் தேதி முதல் வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டரின் விலையை 85 ரூபாய் உயர்த்தியுள்ளது.
19 கிலோ கேஸ் சிலிண்டரின் விலை ரூ.961-35லிருந்து ரூ.1046-05 ஆக உயர்ந்து விட்டது. இதனால் ஹோட்டல்கள், டீக்கடைகள் மற்றும் சாலை ஓர கடைகள் வைத்திருப்போர் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். ஆனால் வழக்கமாக இவர்களில் பெரும்பாலானவர்கள், வீட்டு உபயோகத்திற்குப் பயன்படும் கேஸ் சிலிண்டர்களைத்தான் கள்ள மார்க்கெட்டில் மொத்தமாக வாங்கிப் பயன்படுத்துகிறார்கள் என்பது வேறு விஷயம்.
பெரிய நிறுவனங்கள் பலவும் வீடுகளுக்கு மானிய விலைக்கு கொடுக்கப்படும் கேஸ் சிலிண்டர்களை பிளாக் மார்க்கெட்டில், சிலிண்டருக்கு ரூ. 500 முதல் ரூ.600 வரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.
இதன் காரணமாக வீடுகளுக்கான சமையல் கேஸ் சிலிண்டர்களுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. சென்னையில் கேஸ் சிலிண்டர் கேட்டு புக் செய்தால் 10 நாட்கள் கழித்துத்தான் சிலிண்டர் வருகிறது. காரணம், கேட்டால், சப்ளை இல்ைல என்பதே பதிலாக உள்ளது. ஆனால் கள்ளச் சந்தையில் புழங்கும் கேஸ் சிலிண்டர்களைக் கட்டுப்படுத்தினால் இந்த நிலை நீங்கும் என்பது அப்பாவி ஜனங்களின் புலம்பலாக உள்ளது.