கோவா-ஹைதராபாத்-துபாய்: புதிய விமான சேவை
பெங்களூர்: இந்தியாவின் பல்வேறு நகரங்களிலிருந்து துபாய்க்குப் புதிதாக 9 சேவைகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது. இதன் மூலம் வாராந்திர விமான சேவையின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தற்போது துபாய் நகருக்கு வாரம் ஒருமுறை சேவையாக 48 விமான சேவைகளை மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் 12 நகரங்களிலிருந்து இந்த விமானங்கள் இயக்கப்படுகின்றன.
ஜூன் மாதம் முதல் கோவை, ஹைதராபாத், புனே ஆகிய நகரங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படுகிறது.
ஹைதராபாத் - துபாய் சேவை ஜூன் 5ம் தேதி தொடங்குகிறது. இந்த சேவை வாரம் 3 முறை மேற்கொள்ளப்படும். செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் ஹைதராபாத்திலிருந்து பிற்பகல் 1.20 மணிக்குப் புறப்படும் விமானம், துபாயை அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 3.20 மணிக்கு சென்றடையும்.
கோவா - துபாய் சேவை ஜூன் 17ம் தேதி தொடங்கப்படுகிறது. இதுவும் வாரம் மூன்று முறை சேவையாகும். செவ்வாய்க்கிழமை, வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில் பிற்பகல் 3.55 மணிக்கு கோவாவிலிருந்து கிளம்பி 5.40 மணிக்கு துபாயை சென்றடையும்.
இதேபோல ஜூன் 18ம் தேதி முதல் புனே - துபாய் சேவை தொடங்குகிறது. இதுவும் வாரம் மூன்று முறை சேவையாகும். திங்கள், புதன், சனிக்கிழமைகளில் நள்ளிரவு 12.15 மணிக்குக் கிளம்பி, 1.45 மணிக்கு துபாயை சென்றடையும்.