ஹஜ் யாத்ரீகர்களுக்கு தமிழக அரசு பயிற்சி
சென்னை: ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகளுக்கு பயிற்சி நடத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
2008-ம் ஆண்டில் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த புனித பயணிகளுக்கு சென்னையில் புத்தறிவுப் பயிற்சி முகாம் நடத்த தமிழ்நாடு மாநில ஹஜ் குழு கருதியுள்ளது.
இந்த பயிற்சியின் போது சவூதி அரேபியாவில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், பயண விவரங்கள், ஹஜ் பற்றிய வழிமுறைகள், ஹஜ் குழு மற்றும் ஜெட்டாவிலுள்ள இந்திய துணை தூதரகத்தின் இதர ஏற்பாடுகள் மற்றும் தகவல்கள் பற்றி விரிவாக விளக்கி கூறப்படும்.
இந்த பயிற்சி முகாம், தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் சொஸைட்டியின் உதவியுடன் நடத்தப்படுகிறது. 27-ந் தேதி (தமிழ்) மற்றும் 28-ந் தேதி (உருது) ஆகிய தேதிகளில் தமிழ்நாடு பைத்துல் ஹுஜ்ஜாஜ், (ஹஜ் ஹவுஸ்), எண்.2, டிமெல்லோஸ் ரோடு, சூளை, சென்னை-600112 என்ற முகவரியில் நடைபெறும்.
இப்பயிற்சி முகாம்களில், பெண் புனித பயணிகள் உட்பட அனைத்து ஹஜ் பயணிகளும் (தேர்வு செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டவர்கள்) கலந்து கொள்ளுமாறும், அதன்மூலம் ஹஜ் பயணத்திற்கான விதிமுறைகள், வழிவகைகள் மற்றும் நடைமுறைகளை விரிவாக தெரிந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பன்னாட்டு பாஸ்போர்ட்டில் தனியார் ஹஜ் நிறுவனங்கள் மூலம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பவர்களும் விரும்பினால் இப்புத்தறிவு பயிற்சி முகாமில் கலந்து கொள்ளலாம்.
இந்த பயிற்சி முகாம்களை நடத்துவதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களை மாநில ஹஜ் குழு அனுப்பி வைக்க உள்ளது. ஹஜ் மற்றும் உம்ரா நிறைவேற்றுவது பற்றிய விளக்கங்களை ஆலிம்கள் அளிப்பார்கள்.
இது குறித்து மேலும் விவரங்களை அறிய தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவை 044-28252519 மற்றும் 044-28227617 ஆகிய தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.