நெல்லையில் ரவுடிகள் பட்டியல் எடுப்பு - என்கவுன்டர்?
நெல்லை: நெல்லையில் பழி தீர்ப்பு படுகொலைகள் அதிகரித்துள்ளதாலும், ரவுடிகள் அட்டகாசம் மக்களை பீதிக்குள்ளாக்கி வருவதாலும், ரவுடிகளை ஒடுக்க போலீஸார் லிஸ்ட் எடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் என்கவுன்டர் மூலம் ரவுடிகள் தீர்த்துக் கட்டப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழு்நதுள்ளது.
நெல்லையை அடுத்து சுத்தமல்லியில் கடந்த 11ம் தேதி ரவுடி மதன் உள்ளிட்ட 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். கீழப்பாட்டத்தை சேர்ந்த மணிக்கராஜ், அவரது அக்காள் மகன் அந்தோணிராஜ் ஆகியோர் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடந்தது.
இது தொடர்பாக சுத்தமல்லியை சேர்ந்த சுந்தர், பாலாமடை வி்ஜயராகவன், கீழப்பாட்டம் முத்துபாண்டி, கஞ்சா கணேசன், ராஜா செல்வமோசஸ், பாக்கியராஜ், நாட்டாண்மை தமிழ்செல்வன், மற்றொரூ விஜயராகவன், அழகநேரி ராஜ்குமார், தச்சநல்லூர் ராமசுப்பிரமணியன், மேலக்கரை சந்திரசேகர் உள்ளிட்ட 15 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்துரை சேர்ந்த கூலிப்படை தலைவன் சிங்காரம் என்பவர் மதன் உள்ளிட்ட மூவர் கொலைக்கு பின்னணியாக இருந்து செயல்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரையும், அவரது நண்பர் இசக்கிசெல்வம் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
சிங்காரம் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக இவரும், இவரது கூட்டாளிகளும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்கள் உள்பட 14 பேரை கொன்று புதைத்தும், எரித்தும் உள்ளனர். இதில் பல சம்பவங்கள் வெளிவராமல் இருந்திருக்கின்றன. கொலையானவர்கள் பட்டியலை போலீசார் தாயாரித்து வருகின்றனர்.
மேலும் இந்த ரவுடிகள் சில முக்கிய பிரமுகர்களையும் கொல்ல திட்டமிட்டு இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
இதன் மூலம் தென்மாவட்டத்தில் கடந்த 1996ம் ஆண்டு நடந்தது போன்று மீண்டும் ஒரு சாதி மோதலை உருவாக்க திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறைக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
எனவே நெல்லையில் மீண்டும் தலைதூக்கும் ரவுடிகள் மற்றும் அவர்களுக்கு பின்னணியாக இருந்து செயல்படுபவர்கள் ஆகியோரை ஒடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். தேவைப்பட்டால் என்கவுன்டரில் சுட்டுதள்ளவும் போலீசார் திட்டமிட்டுளதாக கூறப்படுகிறது.
நெல்லையில் ரவடிகளை ஓடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எஸ்பி ஆஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.
போலீஸாரின் இந்த திடீர் லிஸ்ட் எடுப்பால் ரவுடிகள் மத்தியில் பீதி கிளம்பியுள்ளது.