சத்யம்-ராஜு குடும்பம் சுருட்டிய ரூ.715 கோடி!
முதலீட்டாளர்களை புத்திசாலித்தனமாக ஏமாற்றி முடிந்த வரை இந்தக் குடும்பம் பணத்தைச் சுருட்டியுள்ளது என சிபிஐ ஆதாரங்களுடன் தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
இந்த ரூ.715 கோடியில் ராமலிங்க ராஜுவுக்கு ரூ.27.91 கோடியும், அவரது தம்பி ராம ராஜுவுக்கு ரூ.26.68 கோடியும் அன்பளிப்பாக வந்தவையாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.
இதுதவிர தனது பங்குகளை ரூ.26. 68 கோடிக்கு விற்பனை செய்துள்ளார் ராஜு.
மேலும் 1999-ல் ராமலிங்க ராஜுவின் இன்னொரு தம்பி சூர்யநாராயண ராஜு மற்றும் அவரது மனைவி ஜான்சி ராணியும் தங்கள் பங்குகளை மறைமுகமாக 17 டம்மி அக்கவுண்டுகளுக்கு மாற்றியிருக்கிறார்கள். பின்னர் இந்த 17 பேரும் தங்கள் பங்குகளை 5 முதலீட்டு நிறுவனங்களுக்கு மாற்றியது போல் கணக்கு தயாரித்துள்ளனர். இந்த 5 நிறுவனங்களுமே ராமலிங்க ராஜுவால் தொடங்கப்பட்டவை.
இந்தப் பங்குகளின் டிவிடெண்டுகளாக மட்டும் ராமலிங்க ராஜுவுக்கு ரூ.21.05 கோடியும், ராம ராஜுவுக்கு ரூ. 24.32 கோடியும் கிடைத்துள்ளது. அதாவது வருகின்ற வருமானம் முழுக்க தனது குடும்பத்துக்கே வந்து சேரும் வகையில் திட்டமிட்டு போலி கணக்குகள், நிறுவனங்கள் மற்றும் நபர்களை உருவாக்கி மொத்த வெளிமுதலீட்டாளர்களையும் ஏமாற்றியுள்ளனர் ராஜு பிரதர்ஸ்.
இன்னும் இதுபோன்ற பல போலிக் கணக்குகள் மூலம் மட்டுமே ராஜு குடும்பம் ரூ.715 கோடியை சுருட்டியுள்ளது. இவை இதுவரை கண்டு பிடிக்கப்பட்டவைதான். இன்னும் இருக்கிற சொத்துக்கள், வெளிநாட்டில் செய்யப்பட்ட முதலீடுகள் எல்லாம் தனி.
சரி, எப்படி ரூ.5000 கோடிக்குமேல் கணக்குகளை உயர்த்திக் காட்ட முடிந்தது ராஜுவால்?
மொத்தம் 7561 பொய்யான இன்வாய்ஸ்களை உருவாக்கி அவற்றை தனக்கு வேண்டியவர்கள் மட்டுமே பெற்றுக் கொள்வது போல சாமர்த்தியமாக ஒரு நெட்வொர்க்கை உருவாக்கிக் காட்டியுள்ளார் ராமலிங்க ராஜு. இதற்கு சத்யம் அக்கவுண்ட்ஸ் டீமும் உடந்தையாக இருந்துள்ளது. இந்த முழுமையாக இதற்கு ஒத்துழைத்ததா... அல்லது குறிப்பிட்ட சிலர் மட்டும் உடந்தையா என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பதாக தெரிவித்துள்ளது சிபிஐ!