பிரான்ஸ் தேசிய தினம்-இந்திய வீரர்கள் அணிவகுப்பு
பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் இந்திய வீரர்கள் பங்கேற்று நடைபோட்டது இதுவே முதல் முறையாகும்.
அதேபோல இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இன்றைய தின கொண்டாட்டத்தின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய வரலாறு படைத்தார்.
பிரான்ஸ் தேசிய தின நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் முதல் இந்தியப் பிரதமர் சிங்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு இந்தியக் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி பங்கேற்றார் என்பது நினைவிருக்கலாம்.
பிரான்ஸில் நடைபெறும் இதுபோன்ற முக்கிய தேசிய நிகழ்ச்சிகளில் வெளிநாட்டுத் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பது என்பது வழக்கத்தில் இல்லை. அந்த வகையில் மன்மோகன் சிங்குக்குக் கிடைத்த இந்தப் பெருமை இந்தியாவுக்குக் கிடைத்த பெருமையாக கருதப்படுகிறது.
இந்திய வீரர்கள் மிடுக்கு நடை...
இன்றைய தேசிய தின பரேடில், 400 பேர் அடங்கிய இந்திய ராணுவ வீரர்கள் மிடுக்காக அணிவகுத்துச் சென்றனர்.
சாரே ஜஹான் சே அச்சா உள்ளிட்ட பாடல்களை இசை வடிவமாக அவர்கள் ஒலித்தபடி சென்றனர்.
அணிவகுப்பில் முதலாவதாக சென்ற அணி மராத்தா லைட் இன்பேன்டரி பிரிவைச் சேர்ந்த வீரர்கள் ஆவர். இந்தப் பிரிவின் வரலாறு 235 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. உலகின் மிகப் பழமையான படைப் பிரிவு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ராணுவம் தவிர கடற்படை, விமானப்படைகளைச் சேர்ந்த வீரர்களும் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.