விருது வழங்கும் விழாவுக்கு வராத கல்வி அதிகாரிகள் - அமைச்சர் டோஸ்
நெல்லை: மாவட்டத்தின் சிறந்த பள்ளிக்கான விருது வழங்கும் விழாவில் பங்கேற்காத கல்வி துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மைதீன்கான் கடும் கண்டனம் தெரிவித்தார்.
2008-09ம் கல்வியாண்டில் நெல்லை மாவட்டத்தின் சிறந்த பள்ளியாக பாளை புறநகர் ஒன்றியத்தை சேர்ந்த கம்மாளன்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருது வழங்கும் விழா மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் வின்சென்ட் பாஸ்கர் தலைமையில் நடப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கான அழைப்பிதழில் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் வசந்தா, உதவி தொடக்க கல்வி அதிகாரி (நர்சரி) ஜான்ராஜ் ஆகியோர் முன்னிலை வகிப்பர் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் குறிப்பிட்ட 3 அதிகாரிகளும் விழாவிற்கு வரவில்லை.
இதை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வியிடம் அமைச்சர் மைதீன்கான் அழைப்பிதழில் பெயர் போடும் முன் கல்வி அதிகாரிகளிடம் அனுமதி பெற்றேர்களா, என்று கேட்டார். அதற்கு அவர் அனுமதி பெற்றுதான் அழைப்பிதழில் பெயர் சேர்த்தோம் என்றார்.
பின்னர் சிறந்த பள்ளிக்கான விருதை வழங்கி அமைச்சர் மைதீன்கான் பேசுகையில், இங்கு அழைப்பிதழில் தலைமை, முன்னிலை, என பெயர் போடப்பட்ட கல்வி அதிகாரிகள் யாரும் விழாவுக்கு வரவில்லை. பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களது ஓப்புதல் பெற்ற பின்னரே பெயரை போட்டுள்ளார். அரசு அதிகாரிகள் பல சமயங்களில் கடமையை செய்ய தவறுகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அழைப்பிதழில் பெயர் போடும்முன் அதிகாரிகளின் ஓப்புதல் பெற வேண்டும். அதன்பின்னர் விழாவிற்கு அதிகாரிகள் வரவில்லை என்றால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். எங்களை மதிக்காவிட்டாலும் இங்குள்ள குழந்தைகளை மதித்தாவது விழாவுக்கு அதிகாரிகள் வந்திருக்கலாம்.
தமிழகத்தில் தற்போது பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 100 நடுநிலைப்பள்ளிகள உயர் நிலைப்பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளில் 600 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. ஏழை எளியவர்களின் குழந்தைகள் கல்வி அறிவு பெற தேவையான நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ளும் என்றார்.
அமைச்சரின் கண்டிப்பான பேச்சால் பள்ளி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.