விநாயகர் சதுர்த்தி-150 கி. கொழுக்கட்டை படையல்!
தமிழகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், படையல்கள் செய்யபப்பட்டன.
பிள்ளையார்ப்பட்டியில் ..
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயர் ஆலயத்தில் இன்று காலை சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகர், திருச்சி மலைக்கோட்டையில் உள்ள விநாயகர் கோவில் உள்ளிட்ட விநாயகர் திருத்தலங்களில் சிறப்புப் பூஜைகள், படையல்கள் இடப்பட்டன.
150 கிலோ கொழுக்கட்டை...
திருச்சி மலைக்கோட்டையில் விநாயகர், உச்சி பிள்ளையாராகவும், மலையின் கீழ் மாணிக்க விநாயகராவும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிகாலை முதலே விநாயகருக்கு விசேஷ பூஜை, அலங்காரம் செய்யப்பட்டது.
மலைக்கோட்டை மாணிக்க விநாயகருக்கும், உச்சி பிள்ளையாருக்கும் பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள்ளு, நெய், தேங்காய் ஆகிய பொருட்களை கொண்டு மடப்பள்ளியில் தயாரிக்கப்பட்ட சுமார் 150 கிலோ கொண்ட ராட்சத கொழுக்கட்டை படைத்து வணங்கினர்.
பின்பு, அதை நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இன்று காலை முதல் பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து விநாயகரை தரிசனம் செய்து அருள் பெற்றனர்
இதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் உள்ள விநாயகர் ஆலயங்களிலும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.
இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் சிலைகளை அமைத்துள்ளனர்.
சென்னையில் 5000க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் தெருக்கள், வீதிகளின் சந்திப்புகள் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
ஆயிரம் கை விநாயகர் ...
3 அடி உயரம் முதல் 13 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. புதுப்பேட்டை, தியாகராயநகர், ராயபுரம் பகுதிகளில் கேகே.நகர் பகுதிகளில் பிரமாண்டமான விநாயகர் சிலைகள் வைக்கப் பட்டுள்ளன.
வளசரவாக்கத்தில் ஆயிரம் கை கொண்ட விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் பசி, பஞ்சம் நீங்கி ஒற்றுமை வளர இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது.
வெல்லக்கட்டி விநாயகர்...
தி.நகர் வெங்கட் நாராயணா ரோட்டில் 15 அடி உயரத்தில் வெல்லக்கட்டி விநாயகர் சிலையை இந்து முன்னணியினர் வைத்துள்ளனர். 750 கிலோ வெல்லம், 60 கிலோ சர்க்கரை, 60 கிலோ கருப்பட்டி, 2 கிலோ ஏலக்காய், 6 கிலோ முந்திரி பருப்பு, செர்ரிப்பழம் 6 கிலோ உள்பட 1100 கிலோ எடையில் இந்த சிலையை உருவாக்கி உள்ளனர்.
வெல்லத்தை நீர் நிலைகளில் கரைத்தால் நோய் தீரும் என்பது இந்து ஐதீகம். அதன்படி இப்போது நாட்டை உலுக்கி வரும் பன்றி காய்ச்சல், சர்க்கரை வியாதி போன்ற நோய்கள் குணமாக வெல்லக்கட்டியால் செய்த விநாயகரை கடலில் கரைத்தால் நல்லது என்பதற்காக இவ்வாறு வைத்துள்ளனராம்.
கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபம் அருகில் நவக்கிரக வடிவிலும், சக்தி நகரில் சிவன் சக்தியுடன் விநாயகர் அமர்ந்து இருப்பது போலவும் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த விநாயகர் சிலைகள் வருகிற 29, 30-ந்தேதிகளில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும்.
விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.