'அட்டாக்' செய்ய ஆள் இல்லை-ஆட்டம் காணும் அல் கொய்தா!
இன்று நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதலின் 8வது ஆண்டு நினைவு தினம். அப்போது அல் கொய்தா இயக்கம் இருந்ததற்கும், இப்போது இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் காணப்படுவதாக இந்த பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தீவிரவாத செயல்களை செய்வதற்கேற்ற ஆள் கிடைக்காமல் தற்போது அல் கொய்தா இயக்கம் தடுமாறி வருகிறது. தீவிரவாதிகளாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சரியான பயிற்சியும் அளிக்க முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர்.
ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லையையொட்டிய பழங்குடியினர் பகுதியுடன் அல் கொய்தா இயக்கம் இன்று முடங்கிக் கிடக்கிறது.
அதேபோல ஏமன், வடக்கு ஆப்பிரிக்காவில் இந்த இயக்கத்தின் துணை அமைப்புகள் கலைந்து போய் விட்டன. அதேசமயம், உள்ளூர் ஜிஹாதி குழுக்களுடன் அல் கொய்தா இயக்கத்திற்கு தொடர்ந்து தொடர்புகள் உள்ளன. ஆதரவு இருந்தாலும் கூட வெற்றிகள் தற்போது குறைந்து போய் விட்டன.
ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்தபடி அமெரிக்கப் படைகள் நடத்தி வரும் தொடர் ஏவுகணைத் தாக்குதல் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை தீவிரமாக கண்காணித்து வருவது ஆகியவற்றால் அல் கொய்தா இயக்கம் முடங்கிக் கிடக்கிறது.
கடந்த ஆண்டு பாகிஸ்தானின் பழங்குடியினப் பகுதியான வசிரிஸ்தானுக்கு கிழக்கு ஐரோப்பாவிலிருந்து பல தீவிரவாத இளைஞர்கள் இங்கு பயிற்சிக்காக வந்தனர். ஆனால் அவர்களுக்கு சரிவர பயிற்சி அளிக்கக் கூட வசதி இல்லையாம். இதனால் அவர்கள் வெறுத்துப் போய் விட்டனராம்.
தற்போது அல் கொய்தா இயக்கத் தலைவர்களின் எண்ணிக்கை 8 ஆக சுருங்கி விட்டது. இவர்களில் பின் லேடன், ஈமான் அல் ஜவாஹிரி ஆகியோரும் அடக்கம். ஆனால் பின் லேடன் உயிருடன் இருக்கிறாரா என்பதில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.
இவர்கள் உள்பட தற்போது மொத்தம் 200 அல் கொய்தாவினர்தான் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் எகிப்தியர்கள். ஒரு லிபியர் மற்றும் ஒரு மொரீஷியஸ் நபர் உடன் இருக்கிறார்.
சமீபத்தில் பாகிஸ்தானின் தலிபான் அமைப்புடன் அல் கொய்தா கை கோர்த்தது. இதனால் அல் கொய்தா பலவீனமடைந்துள்ளது. மேலும், அல் கொய்தாவினர் குறித்த பல முக்கிய உளவுத் தகவல்கள் கிடைத்தபடி உள்ளதாம். எனவே விரைவில் பின் லேடனை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிக்க முடியும் என அமெரிக்க தரப்பு நம்பிக்கையுடன் உள்ளதாம்.
அமெரிக்காவின் சிஐஏ-வுக்கு இன்னொரு முக்கியத் தகவலும் கிடைத்துள்ளதாம். பின் லேடனுக்கு எல்விஸ் என்ற புனை பெயரும் உண்டாம். இது சமீபத்தில்தான் தெரிய வந்ததாம். இதையடுத்து அந்தப் பெயரை தகவல் தொடர்புகளின்போது அல் கொய்தாவினர் அல்லது தலிபான்கள் பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணித்து வருகிறதாம் அமெரிக்க உளவுப் படை.
இதுகுறித்து துபாயைச் சேர்ந்த வளைகுடா ஆய்வு மையத்தின் தீவிரவாதப் பிரிவு நிபுணர் முஸ்தபா அலானி கூறுகையில், அல் கொய்தா இப்போது தனியான இயக்கமாக இல்லை. தலிபானின் பிரிவு போல ஆகி விட்டது.
விரைவில் பின் லேடன் குறித்த தகவல்கள் பாகிஸ்தானியர்களுக்கோ அல்லது அமெரிக்கர்களுக்கோ நிச்சயம் கிடைக்கும். பின் லேடன் உயிருடன் இருப்பது உண்மையாக இருந்தால் நிச்சயம் அவர் கொல்லப்படுவார் என்றார்.
அல் கொய்தாவின் முடிவு பின் லேடன் உயிரில்தான் இருக்கிறது என்பது பொதுவான கருத்தாக உள்ளது. அதேசமயம், 2005ம் ஆண்டுக்குப் பிறகு அல் கொய்தா இயக்கம் பலவீனமடைந்து விட்டது. அந்த ஆண்டுக்குப் பின்னர் அந்த அமைப்பால் மேற்கத்திய நாடுகளில் எந்தவிதமான தீவிரவாதத் தாக்குதல்களிலும் ஈடுபட முடியாத நிலைக்கு முடக்கப்பட்டுள்ளது. எனவே இதுவே அல் கொய்தாவின் வீழ்ச்சியாக கருதப்படலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது.