துணைவேந்தர் கொலை-வாலிபருக்கு 101 ஆண்டு சிறை
நாகர்கோவில்: துணைவேந்தர், அவரது மனைவி உட்பட மூன்று பேரை கொலை செய்த வழக்கில் வாலிபர் ஒருவருக்கு நாகர்கோவில் நீதிமன்றம் 101 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
நாகர்கோவில் பட்டகசாலியன் விலையில் வசித்து வந்தவர் மாலிக் முகமது. கோழிக்கோடு பல்கலை கழகத்தில் துணை வேந்தராக இருந்தவர் இவரது மனைவி கதிஜா பீவி.
கடந்த 2007 நவம்பர் 8ம் தேதி மாலிக் முகமதுவும், அவரது வீட்டு காவலாளி ஞானப்பிரகாசமும் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். 2 நாட்களுக்கு பிறகு விழுப்புரம் அருகே அவரது மனைவி கதிஜா பீவி எரித்துக் கொல்லப்பட்டு கிடந்தார்.
இது தொடர்பாக ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்த கோபி என்ற சகாய புருனே, நாகர்கோவில் மரவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த அன்பரசு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அன்பரசு ஏற்கனவே மாலிக் முகமது வீட்டில் 3 மாதமாக கார் டிரைவராக வேலை பார்த்தவர். இவரின் நடவடிக்கைகள் சரியி்ல்லாததால் மாலிக் முகமது வேலையை விட்டு நீ்க்கி விட்டார்.
தனது நண்பர் கோபியுடன் வீட்டுக்கு சென்ற அன்பரசு, மாலிக் முகமதுவையும், ஞானப்பிரகாசத்தையும் கொலை செய்தது உறுதியானது. மேலும், அவர்கள் மதுரையில் உள்ள மகளிடம் பணம் வாங்கி தருகிறேன் என்று கூறிய கதிஜா பீவியையும் விழுப்புரம் ஓல்கூர் அருகே எரித்து கொலை செய்ததும் தெளிவானது.
இவர்கள் இருவர் மீதும் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த கொலை வழக்கு விசாரணை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட செசன்சு நீதிமன்றத்தில் நடந்தது. 41 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். வழக்கு முடியும் நிலையில் ஜாமீனில் வெளியே போன அன்பரசு தலைமறைவாகிவிட்டார். தற்போது கோபி மட்டும் சிறையில் இருக்கிறார்.
எனவே கோபி மீதான வழக்கை மட்டும் நீதிபதி விசாரித்து தீர்ப்பு கூறினார். அதில் பல்வேரு பிரிவுகளிலும் சேர்த்து அவருக்கு மொத்தம் 101 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளார்.