நிர்வாகக் குழு கவுன்சில் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தி மோடியை நீக்க முடிவு
மிகப் பெரிய அளவில் மோடி ஊழல் செய்துள்ளது படிப்படியாக அம்பலமாகி வருகிறது. இதுதொடர்பாக வருமான வரித்துறை ஏகப்பட்ட ஆதாரங்களை சேர்த்துக் கொண்டு வருகிறது. இதையடுத்து மோடியை விலகுமாறு இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர். ஆனால் அவரோ முடியாது என்று பிடிவாதமாக மறுத்து விட்டார்.
மேலும் வருகிற 26ம் தேதி கூட்டப்பட்டுள்ள ஐபிஎல்லின் நிர்வாகக் குழுக் கூட்டமும் செல்லாது, நான் தான் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். எனவே இதை ரத்து செய்ய வேண்டும் என மோடி கூறியுள்ளார்.
ஆனால் இதை பிசிசிஐ நிராகரித்து விட்டது. அன்று கூடும் கூட்டத்தில் மோடிக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.
மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் கிடைத்தால் தீர்மானம் நிறைவேறும். இக்குழுவில் மொத்தம் 14 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அதில் மோடியும் ஒருவர். அவர் போக மீதமுள்ள 13 பேரில் ஐ.எஸ். பிந்த்ராவைத் தவிர 9 பேர் மோடிக்கு எதிராக உள்ளனர். மீதமுள்ள 3 பேரான கவாஸ்கர், ரவி சாஸ்திரி, மன்சூர் அலி கான் பட்டோடி ஆகியோர் பெரும்பான்மை ஆதரவுக்கு சாதகமாக வாக்களிப்பார்கள் என்பதால் மோடி தூக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
புர்ஜ் கலீபாவில் ஹாயாக ஓய்வெடுத்த மோடி
ஐபிஎல் ஊழலால் நாடே அல்லோகல்லப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில், அதைப் பற்றி துளியும் கவலைப்படாமல், லலித் மோடி துபாயில் உள்ள உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலீபாவில் அமைந்துள்ள சொகுசு வசதிகள் நிறைந்த அர்மானி ஹோட்டலில் ஹாயாக ஓய்வெடுத்த தகவல் வெளியாகியுள்ளது.
துபாயில், ஐசிசி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் இநதிய கிரிக்கெட் வாரியம் சார்பில் மோடி கலந்து கொள்ளச் சென்றிருந்தார். அந்த சமயத்தில்தான் ஐபிஎல் ஊழல் நாறிப் போய் நாட்டையே பரபரப்பில் ஆழ்த்தியிருந்தது.
ஆனால் மோடியோ சற்றும் கவலைபடாமல் படு ஜாலியாக துபாயில் பொழுதைக் கழித்துள்ளார். துபாய் மன்னரான ஷேக் முகம்மது மோடியின் நண்பராம். இதனால் துபாய்க்கு வந்திருந்த மோடிக்கு விருந்தளித்துக் கெளரவித்துள்ளார் மன்னர்.
பின்னர் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த மோடியை அழைத்து அர்மானி ஹோட்டலில் தங்குமாறு கேட்டுக் கொண்டாராம். அதன்படி மோடியும் அங்கு சென்று ஜாலியாக தங்கியுள்ளார்.
படு கூலாக துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு மும்பை திரும்பினார் மோடி.
இந்த நிமிடம் வரை மோடி ஒரு துளி கூட பதட்டமில்லாமல்தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.