ஜெர்மனியில் ஜார்ஜ் புஷ்சுக்கு விஷம் வைக்கப்பட்டதா?-மனைவி பரபரப்பு தகவல்
லாரா புஷ் எழுதியுள்ள "Spoken from the Heart" என்ற புத்தகத்தில் இந்தத் தகவல் இடம் பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புஷ் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நடந்த சம்பவங்களை தொகுத்து 432 பக்கங்கள் கொண்ட புத்தகமாக இதை லாரா வெளியிட்டுள்ளார்.
அதில், ஜெர்மன் மாநாட்டில் பங்கேற்றபோது ஜார்ஜ் புஷ் மற்றும் தனக்கும், தங்களுடன் இருந்த குழுவினருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும், இதனால் உணவில் விஷம் கலந்திருக்கலாம் என்று தங்களுடன் இருந்த மருத்துவர்களும் ரகசியப் பிரிவினரும் கூறியதாக லாரா எழுதியுள்ளார்.
தங்களுடன் இருந்த அமெரி்க்க ராணுவ அதிகாரி ஒருவருக்கு நடக்கக் கூட முடியாமல் போய்விட்டதாகவும், இன்னொரு அதிகாரிக்கு காது கேட்காமல் போனதாகவும் கூறியுள்ளார்.
தீவிரவாதிகளின் கைகளில் அணுக் கதி்ர் வீச்சு மிக்க ஏதோ ஒரு பொருள் சிக்கி அதை நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் பகுதியில் வைத்துவிட்டார்களோ என்றும் சந்தேகம் ஏற்பட்டது.
ஆனால், மாநாடு நடந்த ஹெலிங்ஜென்டாம் பகுதியில் வழக்கமாகக் காணப்படும் வைரஸ் தான் எங்களுக்கு பாதிப்பை உண்டாக்கியதாக டாக்டர்கள் பின்னர் தெரிவித்தனர். எங்களைப் போலவே வேறு நாட்டு குழுவினருக்கும் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டதா என்று இதுவரை தெரியவில்லை.
ஒரு கட்டத்தில் ஜார்ஜ் புஷ்சுக்கு உடல் நிலை மிகவும் மோசமாகி எழுந்து நிற்கக் கூட இயலாத நிலை ஏற்பட்டது என்று கூறியுள்ளார் லாரா.
புஷ்சுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக அப்போது எந்த தகவலும் வரவில்லை. இப்போது தான் முதன்முதலாக லாரா இந்தத் தகவலை வெளியுலகுக்குக் கூறியுள்ளார்.