அரசு வெளியிட்டுள்ள கட்டண விகிதத்தை ஏற்க தனியார் பள்ளிகள் மறுப்பு
சென்னை: அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணங்களை ஏற்க முடியாது என்று தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களின் சங்க தலைவர் கே.ராஜன் மற்றும் பொதுச் செயலாளர் பி.டி.அரசகுமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் பெரிய கல்வி நிறுவனங்கள் எல்லாம் கல்வி கட்டணத்தை வசூல் செய்து முடித்த பிறகு நடுத்தர மற்றும் சிறிய பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கை செய்து கொண்டிருக்கும் வேளையில் தாளாளர்கள் மற்றும் பெற்றோர்கள் அந்தந்த பள்ளிகளின் கல்வித் தரத்திற்கேற்ப கட்டணம் குறித்து ஏற்கனவே தெரிவித்திருந்த கருத்துக்களை பரிசீலிக்காமல் தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை அரசு வெளியிட்டிருப்பது அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கிறது.
பள்ளிகளின் கல்வித்தரம் மற்றும் கட்டமைப்பு வசதிகளை கருத்தில் கொண்டு பள்ளி தாளாளர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒருமித்த கருத்துடன் கூடிய கல்வி கட்டணத்தை நிர்ணயித்தால் மட்டுமே நிர்வாக சிக்கல்களை பள்ளி தாளாளர்கள் தவிர்க்க இயலும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தோம். எனவே அரசால் தன்னிச்சையாக வெளியிடப்பட்டிருக்கும் கல்வி கட்டணங்களை ஏற்க இயலாது.
அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்கள் குறித்த சங்கத்தின் நிலைப்பாட்டையும், தனியார் பள்ளிகளின் தாளாளர்களின் கோரிக்கைகளையும், அரசு நிர்ணயித்த கமிட்டியின் தலைவர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து தெரிவிக்க இருக்கிறோம்.
எனவே அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டணங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். மேலும் சமச்சீர் கல்வியுடன் ஏற்கனவே நடைமுறையில் உள்ள மெட்ரிக் பாடத்திட்டங்களையும் நடத்துவதற்கு அரசு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும். பள்ளி வாகனங்களில் சுமார் 25 மாணவர்களை ஏற்றுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.