குடந்தை பள்ளி தீ விபத்து - குற்றவாளிகள் விடுவிப்புக்கு எதிர்ப்பு
கும்பகோணம் : கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என். ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் கே.எஸ். கனகராஜ் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
கல்வி வியாபாரமயத்தின் உச்ச கட்ட விளைவாக கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ம் தேதி குடந்தையில் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் தீவிபத்து ஏற்பபட்டது. இதில் 94 இளம் குழந்தைகள் கருகிய கொடுமையைக் கண்டு உலகமே அதிர்ச்சியடைந்தது.
இச் சம்பவத்திற்கு காரணமான பள்ளியின் தாளாளர் பழனிச்சாமி, அவரது மனைவி சரஸ்வதி, தலைமையாசிரியர் சாந்தலெட்சுமி, சமையலர் விஜயலட்சுமி, வசந்தி, தமிழக தொடக்கக் கல்வி இயக்குனர் கண்ணன், முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் முத்து பழனிச்சாமி மற்றும் முன்னாள் தாசில்தார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு, ஏழாண்டுகள் நடந்து முடிந்த நிலையில் தஞ்சை நீதிமன்றம் மூன்று பேரை அதிரடியாக விடுதலை செய்துள்ளது. இது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.
பள்ளியை முறையாக ஆய்வு செய்யாமல் அனுமதி கொடுத்த தமிழக தொடக்கக் கல்வி இயக்குனர் கண்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்து பழனிச்சாமி மற்றும் முன்னாள் தாசில்தார் ஆகியோர் மிகப்பெரிய தவறு செய்துள்ளனர்.
குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதையறிந்து குழந்தைகளைப் பறி கொடுத்த பெற்றோர் நீதியும் விலைபோகுமா என்று உண்ணாவிரத போராட்டத்தை துவக்கியுள்ளனர். இந்த தீர்ப்பால் தமிழகத்தின் சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த வழக்கில், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழக அரசுக்கும் அத்தகைய பொறுப்பு இருக்கிறது. எனவே, தமிழக அரசு உடனடியாக இந்த தீர்ப்பு குறித்து மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.