தர்மபுரி பஸ் எரிப்பு அப்பீல் வழக்கு-நாளை சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு

கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து அதிமுகவினர் கலவரத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரிக்கு சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகளின் பஸ் அதிமுகவினரால் எரிக்கப்பட்டது. இதில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் உடல் கருகி பலியாயினர்.
இந்த வழக்கை அதிமுக தரப்பு இழுத்தடித்தது. அதிமுக ஆட்சி இருந்தபோது வழக்கை நடத்த போலீஸ் ஒத்துழைப்பு தரவில்லை.
எல்லா பிரச்சனைகளையும் மீறி இந்த வழக்க விசாரணை நடந்தது. இதில் வழக்கில் 28 அதிமுகவினர் மீது வழக்குத் தொடரப்பட்டு நெடு என்ற நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும், 25 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து சேலம் செசன்ஸ் கோர்ட் தீர்ப்பளித்தது.
தண்டனையை எதிர்த்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். அதில் 25 பேரின் 7 ஆண்டு தண்டனை 2 ஆண்டாக குறைக்கப்பட்டது. ஆனால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து 28 பேரும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். இந்த மனுவை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் பி.எஸ்.செளகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது. விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த தீர்ப்பு நாளை அளிக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications