காமன்வெல்த்: எந்த மத வழிபாடும் கூடாது; ஆனால், வேத மந்திரங்கள் இடம் பெறலாம்-பாஜக
அதே நேரத்தில் வேத மந்திரங்களை ஒலிக்கச் செய்யலாம் என்று அவர் கூறியுள்ளார்.
அவரது கடித விவரம்:
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க மற்றும் நிறைவு விழாக்களின்போது பின்னணி இசையில் அஸான் சேர்க்கப்பட்டுள்ளதாக எனக்குத் தெரியவந்துள்ளது. காமன்வெல்த் விழாக்களில் பின்னணியில் மதம் சார்ந்த பின்னணி இசையை இசைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்றும் எனக்குத் தகவல் கிடைத்தது.
மேலும் கவாலிப் பாடல்களும் பாடப்படும் என்றும் தெரியவந்துள்ளது. இதுபோல் மற்ற மதங்களுக்கான இசையும் பாடல்களும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி விழாக்களில் இடம் பெற இருப்பதாகவும் அறிந்தேன்.
விளையாட்டு வீரர்கள் தனிப்பட்ட முறையில் மதப் பாடல்களையோ வழிபாடுகளையோ மேற்கொள்வதில் தவறில்லை. ஆனால் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் மதம் சார்ந்த விஷயங்கள் இடம் பெறக்கூடாது.
நம் நாடு மதச்சார்பற்ற நாடு. நம் நாட்டில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மத விஷயங்கள் தேவையில்லை. விளையாட்டுப் போட்டியின் தொடக்க, நிறைவு விழாக்களின்போது காமன்வெல்த் பாடல் மட்டுமே பாடப்பட வேண்டும்.
காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கூட மத விஷயங்களைப் புகுத்துவதன் மூலம் அரசியல் லாபம் காண மத்திய அரசு முயல்வதாகத் தெரிகிறது.
இந்திய கலாசாரம், பண்பாட்டின்படி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் தொடக்க, நிறைவு விழாக்களின்போது வேத மந்திரங்களை ஒலிக்கச் செய்யலாம். வேத மந்திரங்கள் எந்த மதத்தையும் சார்ந்தவை அல்ல. மனித வாழ்வியல் நெறிகளை போதிக்கின்றன. உலகம் முழுவதும் ஒரே குடும்பம் ("Vasudev Kutumbakam-The whole world is one village''), விருந்தினர்கள் கடவுளின் தூதர்கள் ("Athithi devo Bhavah-the guest is akin to God'') என்கிறது வேதம்.
எனவே உங்களைப் போன்ற மதச்சார்பற்ற பிரதமர் இந்த விஷயத்தில் தலையிட்டு காமன்வெல்த் போட்டியில் நமது பண்பாட்டை வெளிப்படுத்தும் விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுளளார் ராஜ்நாத் சிங்.