டெல்லி நட்சத்திர ஹோட்டலில் வெளிநாட்டு அணியின் பாதுகாப்பு அதிகாரி திடீர் கைது
டெல்லி: ஆயுதத்துடன் வெளிநாட்டு அணி ஒன்றின் பாதுகாப்பு அதிகாரியை டெல்லி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வைத்து பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை கூறுகையில், அசோகா ஹோட்டலில் அவர் கைது செய்யப்பட்டார். சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து ஒரு ஆயுதம் கைப்பற்றப்பட்டுள்ளது. பாதுகாப்பு சோதனையின்போது அவர் சிக்கினார். அவரிடம் தூதரக பாஸ் உள்ளது. ஆயுதம் வைத்திருக்க அவருக்கு அனுமதி கிடையாது. இதனால்தான் கைது செய்யப்பட்டுள்ளார்.
ப்லவேறு வெளிநாட்டு அணிகளின் அதிகாரிகள் தங்கியிருந்த பகுதிக்குள் அவர் நுழைய முயன்றபோது நடந்த சோதனையின்போது அவர் பிடிபட்டார் என்றார்.
அந்த நபர் சிங்கப்பூர் தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரி என்று கூறப்படுகிறது. தனது அணியினரைப் பார்ப்பதற்காக அவர் வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் துப்பாக்கியுடன் அவர் வந்ததால்தான் பிடிக்கப்பட்டதாக தெரிகிறது.