முஸ்லீம் சட்ட வாரிய பிரதிநிதிகள் என்னுடன் பேச வருகிறார்கள்-ஜெயேந்திரர்
காஞ்சிபுரம்: ராமர் ஜென்மபூமி விவகாரம் தொடர்பாக இரு முஸ்லீம் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள அகில இந்திய முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியத்தின் பிரதிநிதிகள் அதுகுறித்து என்னுடன் பேச அக்டோபர் 17ம் தேதி வருகின்றனர் என்று கூறியுள்ளார் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஜெயேந்திரர் கூறுகையில், ராமர் ஜென்ம பூமி விவகாரம் தொடர்பாக லக்னோவில் வைத்து இரு முஸ்லீம் அமைப்புகளுடன் சட்ட வாரியம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதுகுறித்து என்னிடம் விளக்க முஸ்லீம் சட்ட வாரிய பிரதிநிதிகள் அக்டோபர் 17ம் தேதி வருகின்றனர். அவர்களிடம் விவரத்தைக் கேட்டறிந்த பின்னர் எனது கருத்துக்களைத் தெரிவிப்பேன்.
பல்வேறு இந்து மற்றும் முஸ்லீம் அமைப்புகளுடன் ஏற்கனவே சட்ட வாரியம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்றார் ஜெயேந்திரர்.
ஜெயேந்திரர் இப்படிக் கூறினாலும் அயோத்தி தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வதில் முஸ்லீம் சட்ட வாரியம் தீவிரமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு இல்லை என்றும் அது ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது நினைவிருக்கலாம்.
ஏற்கனவே கடந்த 2003ம் ஆண்டு அயோத்திப் பிரச்சினையில் தலையிட்டு மத்தியஸ்தம் செய்ய முயன்றார் ஜெயேந்திரர். ஆனால் அவரது முயற்சிகளுக்கு யாரும் அப்போது பெரிய முக்கியத்துவம் தரவில்லை என்பது நினைவிருக்கலாம். இப்போதும் கூட ஜெயேந்திரரின் உதவியை யாரும் நாடவில்லை. இந்த நிலையில்தான் முஸ்லீம் சட்ட வாரிய பிரதிநிதிகள் பேச வருவதாக கூறியுள்ளார் ஜெயேந்திரர்.
திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.2.5 கோடியில் தங்க கிரீடம்:
ஜெயேந்திரர் நிருபர்களிடம் மேலும் கூறுகையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு காஞ்சி சங்கர மடத்தின் சார்பாக தங்க கிரீடத்தை காணிக்கையாக வழங்க முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி பக்தர்களிடம் பெறப்பட்ட தங்கம், வைரம் உள்ளிட்டவற்றைக் கொண்டு சுமார் 3 அடி உயரம் கொண்ட, 14.5 கிலோ எடை கொண்ட தங்க கிரீடம் தயாரிக்கப்பட்டது.
இதை வரும் 21ம் தேதி திருப்பதி ஏழுமலையானுக்கு நான் காணிக்கையாக வழங்குகிறேன்.
மகா பெரியவர் மறைந்த ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் நினைவாக அவருக்கு குரு காணிக்கையாக காஞ்சி சங்கர மடம் சார்பில் விலைமதிப்பற்ற தங்கத்தால் ஆன தங்க ரதம் பெங்களூரில் தயாரிக்கப்பட்டது. சிதம்பரம் நடராஜ பெருமான் நடனமாடுவதைப் போல காஞ்சி மகா பெரியவர் நடனமாடுவது போன்ற படம் உருவாக்கப்பட்டு இந்த தங்க ரதத்தில் பொருத்தப்பட உள்ளது.
இந்த தங்க ரதம் வரும் விஜயதசமியன்று மாலை 5.30 மணி முதல் 6 மணிக்குள் சங்கர மடத்தில் வலம் வரும்.
இந்த ரதம் பெளர்ணமி நாட்களிலும், குரு வாரங்களிலும், பெரியவர் அனுஷ நட்சத்திர நாட்களிலும் பிருந்தாவனத்தைச் சுற்றி வலம் வரும் என்றார்.