சுசீந்திரத்தில் மூளைச் சாவு ஏற்பட்ட மாணவனின் உடல் உறுப்புகள் தானம்
நெல்லை: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே சாலை விபத்தில் மூளைச் சாவை சந்தித்த மாணவனின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்தரம் அருகே உள்ள கொட்டாரம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மனைவி சாந்தி. தங்கவேல் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா விடுதியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மூத்த மகன் மணிகண்டன். இளைய மகன் நாகேந்திரன்.
இதில் மணிகண்டன் நாகர்கோவிலில் மெக்கானிக்காக இருந்து வருகிறார். நாகேந்திரன் சுசீந்திரம் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.
இந்நிலையில் உறவுக்கார வீட்டில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. இதில் தங்கவேல் குடும்பத்துடன் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்த உடன் விருந்து பறிமாறப்பட்டது. அப்போது உறவினர் வீட்டுக்கு சாப்பாடு கொண்டு செல்வதற்காக நாகேந்திரனை அனுப்பி வைத்தனர்.
நாகேந்திரன் உணவு பொருட்களை மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றார். அவருடன் மோட்டார் சைக்கிளில் சித்தி மகள் நாராயிணி. மற்றொரு சித்தி மகன் சுதிர் ஆகியோரும் சென்றனர். இந்நிலையில் மோட்டார் சைக்கிள் அவ்வழியே வந்த சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்களில் வந்து மூவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் நாகேந்திரன், நாராயணி ஆகியோர் மயக்கம் அடைந்தனர். அப்போது சிறுவன் சுதிர் மயங்கிய நிலையில் இருந்த நாராயணி கையில் இருந்த செல்போனை எடுத்து பெற்றோருக்கு விபத்து குறித்து தகவல் தெரிவித்தார்.
உடனடியாக உறவினர்கள் வடுகன்பட்டிக்கு விரைந்து சென்று ஆம்புலன்ஸ் மூலம் கொட்டராத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு நாராயிணி மற்றும் சுதிரை அனுமதித்தனர். ஆனால் நாகேந்திரனின் நிலை மோசமாக இருந்ததால் நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.
நாகேந்திரனை நாகர்கோவிலில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயர் சிகிச்சை அளித்தனர். இருந்தாலும் பலன் கிடைக்கவில்லை. அப்போது சிகிச்சை அளித்த டாக்டர்கள் பரிசோதனை நடத்தி நாகேந்திரனின் உடல் பாகங்கள் நன்றாக இயங்குவதாகவும், மூளை செயல் இழந்து விட்டதாகவும் கூறினர்.
இதனால் நாகேந்திரன் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். இதுபற்றி டாக்டர்கள் மூலம் தமிழக அரசு சுகாதாரதுறையின் உடல் உறுப்பு தானப்பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் 2 சிறுநீரகங்களில் ஒன்று மதுரையில் உள்ள கிட்னி பவுன்டேசனுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது.
மற்றொரு சிறுநீரகம் நெல்லையில் உள்ள கிட்னி கேர் சென்டரில் உள்ள நோயாளி மாடசாமி என்பவருக்கு உடனடியாக பொருத்தப்பட்டது. 2 கண்களும் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பொருத்துவதற்காக எடுத்து செல்லப்பட்டது.