வெங்காயம், தக்காளி விலை போட்டி போட்டு கடும் உயர்வு
பாவூர்சத்திரம்: நாட்டின் பிற பகுதிகளைப் போல நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்திலும் தக்காளி விலையும், வெங்காய விலையும் போட்டி போட்டுக் கொண்டு உயர்ந்து வருகின்றன. இங்கு ஒரே நாளில் தக்காளி விலை 2 மடங்கு உயர்நதது.
பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ ரூ.30க்கு விற்ற தக்காளி இன்று ஒரே நாளில் 2 மடங்கு அதிகரித்து ரூ.60 ஆக உயர்ந்துள்ளது.
பல்லாரி (பெரிய வெங்காயம்) கடந்த வாரம் ரூ.60ல் இருந்து ரூ.100க்கு விற்பனையானது. ஏற்றுமதி தடை காரணமாக படிப்படியாக விலை குறைந்து நேற்று ரூ.50க்கு விற்பனையானது. ஆனால் மீண்டும் ரூ.60 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல் கேரட் ரூ.30ல் இருந்து ரூ.48 ஆகவும், பீன்ஸ், அவரை ரூ.30லிருந்து ரூ.45 ஆகவும் விலை அதிகரித்துள்ளது. கிலோ ஓன்றுக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை விற்பனையாகும் தடியங்காய், பூசணி, சுரைக்காய், ஆகியவை ரூ.10 ஆகவும், புடலங்காய் ரூ.20, மல்லி இலை ரூ.40, முட்டைகோஸ் ரூ.20, வெண்டை ரூ.14 ஆகவும் விலை அதிகரித்துள்ளது.
வெங்காயம் ரூ.20ல் இருந்து ரூ.50வரை தரம் வரியாக விற்பனை செய்யப்படுகிறது.
பாவூர்சத்திரம் பகுதியில் மகசூல் இல்லாததாலும், மதுரையில் இருந்து காய்கறி வரத்து குறைவுகாரணமாகவும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும், புத்தாண்டு, பொங்கல் வரை விலை குறைய வாய்ப்பில்லை என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் இதே நிலைதான். முதலில் வெங்காயம் கடுமையான விலை உயர்வைக் கண்டது. பின்னர் இடையில் சற்று குறைந்து தற்போது மறுபடியும் உயர்ந்து வருகிறது. ஆனால் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்தவண்ணம் இருப்பதால் மக்கள் கடும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.